வேலூர்: 92 அடி உயர தீர்த்தகிரி முருகனுக்கு மகா கும்பாபிஷேகம் - மலை மீது அதிர்ந்த `அரோகரா’ முழக்கம்
வேலூர் சத்துவாச்சாரிக்கு அருகிலுள்ள புதுவசூர் மலைமீது அமைந்திருக்கிறது ஸ்ரீ தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
குன்றின் அடிவாரத்தில் சுபஸ்ரீ விநாயகர் அருள்பாலிக்கிறார். அவரை தரிசிக்கும்போதே குன்றுரைக்குமரன் நம்மை மேலிருந்து அழைப்பதுபோல ஓர் உணர்வு ஏற்படும். இங்கு ஒரு நுழைவு வாயில். வளைந்து வளைந்து செல்லும் படிக்கட்டுகளின் வழியே பயணித்தால் முதலில் வலப்புறமும் வருவது முருகப்பெருமானின் பாதங்கள். மேலும், இக்கோயிலை அடைய சாலையும் மலைமேல் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில், வாகனங்களில் செல்லலாம்.

மலை மீது பரசவத்துடன் காட்சித் தருகிறது ராஜகோபுரம். ராஜகோபுரத்தில் உள்ளே நுழைந்ததும் நம் நேர்ப்பார்வையில் புன்னகையுடன்இருபுறமும் வள்ளியும், தெய்வானையுடன் நின்றருள்கிறார் தீர்த்தகிரி முருகப்பெருமான்.
ஆடிக்கிருத்திகை விழா இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரணியிலும், கிருத்திகையிலும் இங்கு வந்து காவடிச் செலுத்துவது அற்புதமான ஒன்று. அலகு குத்தி வருபவர்களும் உண்டு.
தைமாத கிருத்திகையன்றும், கார்த்திகை மாதக் கிருத்திகையிலும்கூட பக்தர்கள் காவடி சுமந்துவந்து ஐயனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர். பங்குனி உத்திரத்தன்றும் பக்தர்கள் பால்குடம் சுமந்து பெருமானை வழிபடுகின்றனர்.
இந்த நிலையில், ராஜகோபுரத்துக்கு எதிரேயுள்ள குன்றின்மீது 92 உயரத்தில் மிக பிரமாண்டமான தீர்த்தகிரி முருகனை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்குமேலாக நடைபெற்றுவந்தது. மிக நேர்த்தியாக திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், அந்த சிலைக்கு இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

டிரோன்களை பறக்கவிட்டு சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைமீது ஏறிவந்து `அரோகரா அரோகரா...’ என பக்தி முழக்கமிட்டு தீர்த்தகிரி முருகனை வழிபட்டனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும்போதே தீர்த்திகிரி முருகன் 92 அடி உயரத்தில் அற்புதமாக அழகாக தத்ரூபமாக காட்சி தருவதையும் பார்க்க முடிகிறது. மனமுருகி வேண்டுவோர்க்கெல்லாம் அவர்களின் நியாயமான வேண்டுதல்களை நிறைவேற்றுகிறான் தீர்த்தகிரி முருகன் என்பது இத்தருத்தலத்தின் வரலாற்று சிறப்பாக பக்தர்கள் கருதுகின்றனர்.