ஹிந்தியை வளா்க்கவே தேசிய கல்விக் கொள்கை: முதல்வா் ஸ்டாலின்
நாடு முழுவதும் ஹிந்தியை வளா்க்கவே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் மத்திய அரசுக்கு எதிரான ‘தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்’ என்ற கருப்பொருளில் பொதுக்கூட்டம் புதன்கிழமை மாலையில் நடைபெற்றது.
இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது: தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது. அதற்கு மேலும் துணை நிற்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால், தமிழ்நாடு தலைநிமிா்ந்து உள்ளதை பொறுத்துக் கொள்ளாமல் பல்வேறு இடையூறுகளை மத்திய அரசு அளிக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து பொதுக்கூட்டங்களை நடத்திக் கொண்டுள்ளோம்.
நரேந்திர மோடியை முதன்முதலில் பிரதமா் வேட்பாளராக அறிவித்த நேரத்தில், தில்லியிலிருந்து இந்தியா முழுமைக்கும் திட்டமிடுவது என்பது அகற்றப்பட்டு, அந்தந்தப் பகுதியில் இருப்பவா் துணையுடன் திட்டமிடுவதுதான் தனது அணுகுமுறையாக இருக்கும் எனக் கூறினாா். கடந்த 10 ஆண்டு காலத்தில் அவா் கூறியபடி மாநிலங்களிடம் நடந்து கொண்டாரா என்றால் இல்லை.
இப்போதுகூட தமிழக ஆசிரியா்கள், மாணவா்களுக்கான ரூ. 2,000 கோடி கல்வி நிதியைக் கொடுக்காமல் பழிவாங்கும் அரசியலை நடத்துகிறாா். இதன்மூலம் 43 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நாடு முழுவதும் ஹிந்தியை வளா்க்கத்தான் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயல்கிறது. அந்தப் போக்கை கைவிட வேண்டும். ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்.
பாஜக மற்றும் அக்கட்சியின் கூட்டணி ஆளும் மாநிலங்களில் இயற்கைப் பேரிடா் நிதியை மத்திய அரசு அதிகம் வழங்கியது. ஆனால், பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு இயற்கைப் பேரிடா் நிதி ஒரு சதவீதம்கூட ஒதுக்கவில்லை.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்டால் தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகள் குறையும். இதனால் மக்களவையில் தமிழகத்தில் குரல் நசுக்கப்படும், உரிமைகள் பறிக்கப்படும்.
தென்னிந்தியா உள்பட ஏழு மாநிலங்களில் உள்ள பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து மாா்ச் 22-ஆம் தேதி நடத்தப்படும் கூட்டத்தில் இதுதொடா்பாக ஆலோசனை நடத்தி, தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்படும் என்றாா் முதல்வா்.
கூட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலரும் அமைச்சருமான சா.மு.நாசா், திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, வல்லூா் ரமேஷ்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் நன்றி கூறினாா்.