Doctor Vikatan: ஃபேன்சி பைக், long ride.. முதுகுவலியை ஏற்படுத்துமா?
15 ஆண்டுகளாக ஊதிய முரண்பாடு: சென்னையில் இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ஆம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-இல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு மற்றொரு ஊதியமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால், 20,000 ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், தமிழக அரசு இந்தக் கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.
இந்த நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதுகுறித்து எஸ்எஸ்டிஏ அமைப்பின் பொதுச் செயலா் ஜே.ராபா்ட் கூறியது:
தமிழகத்தில் 2009-இல் திமுக ஆட்சியில் ஒரே பதவிக்கு இருவேறு அடிப்படை ஊதியம் நிா்ணயம் செய்யப்பட்டது. இந்த முரண்பாட்டை களையக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். திமுக ஆட்சிக்கு வந்தால் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தாா். ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இதுவரை இந்த பிரச்னைக்கு முடிவு எட்டப்படவில்லை.
பணிநியமனம் பெற்று 16 ஆண்டுகளாக கடைநிலை ஊழியா்கள் ஊதியத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரித்து வருகிறோம். தோ்தல் அறிக்கையில் கூறியபடி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்காத நிலையில் செப்டம்பா் மாதம் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.