16 பெட்டிகளுடன் நமோ பாரத் ரயில் சேவை: ஏப்.24-இல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்!
மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட முதல் நமோ பாரத் விரைவு ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.24இல் தொடங்கி வைக்கிறார்.
குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து புஜ் நகருக்கு இடையே நாட்டின் முதல் நமோ பாரத் விரைவு ரயில் சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயிலில் 12 பெட்டிகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் நமோ பாரத் விரைவு ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட முதல் நமோ பாரத் ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, வரும் 24-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயில் பிகார் மாநிலம் பாட்னாவில் இருந்து ஜெயநகருக்கு இயக்கப்பட உள்ளது.
இத்தகவலை ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் விளம்பரப் பிரிவு செயல் இயக்குநர் திலீப் குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: முதல்முறையாக 16 பெட்டிக ளைக் கொண்ட நமோ பாரத் ரயில் அறிமுகம் செய்யப்படுகிறது.
பாட்னாவில் இருந்து ஜெயநகருக்கு இயக்கப்பட உள்ள இந்த ரயில் மணிக்கு 110கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இதன் மூலம் இந்த நகரங்கள் இடையிலான பயண நேரம் பாதியாகக் குறையும்.
வடக்கு பிகாரில் இருந்து பாட்னாவுக்கு வேலைவாய்ப்பு, வர்த்தகம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்காக பயணம் மேற்கொள்ளும் சாமானியர்களுக்கு இந்த ரயில் விரைவான, பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 2000 பயணிகள் பயணிக்க முடியும். ஜெயநகரில் இருந்து பாட்னாவுக்கு இயக்கப்பட உள்ள ரயிலானது மதுபானி, சக்ரி, தர்பங்கா, சமஷ்டிபூர், பரெளனி, மொகாமா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில் நடுத்தர வகுப்பினருக்கு மிகவும் வசதியானதாக இருக்கும். மேலும் உள்ளூர் கைவினைப் பொருள்களையும் வேளாண் பொருள்களையும் சிறிய நகரங்களில் இருந்து பெரிய சந்தைகளுக்கு கொண்டு வர உதவிகரமாக இருக்கும்.
கவச் என்ற பாதுகாப்பு கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த ரயிலில் கண்காணிப்பு கேமரா, தீத்தடுப்பு வசதிகளும் இடம்பெற்றிருக்கும். இந்த ரயில் இருபுறமும் என்ஜின்களைக் கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.