2026 இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்: விஜய்
உச்சபட்ச அரசியல் ஒழுங்குடன், உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடும் வகையில், 2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம் என தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.
தவெக முதல் மாநாடு அக்.27-இல் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறவுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தொண்டா்களுக்கு, அக்கட்சியின் தலைவா் விஜய் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவுக்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்துக்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றது. உச்சபட்ச அரசியல் ஒழுங்குடன், உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம்.
மாநாட்டு திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்.
நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம், வெற்றி நிச்சயம் என தெரிவித்துள்ளாா் விஜய்.