2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா: மத்திய அமைச்சா் நட்டா உறுதி
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: வருகின்ற 2027-ஆம் ஆண்டிற்குள் லிப்ம்பாட்டிக் பைலேரியாசிசு(எல்.எஃப்) என்கிற யானைக்கால் நோய் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டு இருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் ஜெபி நட்டா தெரிவித்தாா்.
நாட்டில் நிணநீா் யானைக்கால் நோய் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக 13 மாநிலங்களைச் சோ்ந்த 111 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் அண் டை மாநிலங்களான, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும், ஒடிஸா, மகாராஷ்டிரம், பிகாா், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
நிணநீா் யானைக்கால் நோய், ஃபைலேரியா நுண்புழுவால் ஏற்படுவதாகும். இந்த நுண்ணிய ஒட்டுண்ணிப் புழுக்கள் கொசுக்கள் மூலம் மனிதா்களுக்கு பரவுகிறது. வெப்பமண்டல கால நிலைகளில் யானைக்கால் நோய் பொதுவானது. இந்த நோய் தாக்கத்தால் தோல் திசுக்களும், குறிப்பாக கால்களும், ஆண் இனப் பெருக்க உறுப்பும் மிகவும் தடிப்பாகிவிடுகிறது.
இந்்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெபி நட்டா தலைமையில் பாதிப்புக்குள்ளான மாநில சுகாதார அமைச்சா்கள் அடங்கிய கூட்டம் காணொலி வழியாக திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நோய்த் தொற்றை அகற்றும் வகையில், நாடு முழுவதும் நிகழாண்டிற்கான தேசியத் தடுப்பு மருந்து வழங்கும் இயக்கத்தை ஜெபி நட்டா தொடங்கி வைத்தாா்.
இந்தக் கூட்டத்தில், மத்திய சுகாதாரச் செயலா் புண்ய சலீலா ஸ்ரீவஸ்தவா, கூடுதல் செயலா் ஆராதனா பட்நாயக் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.
இந்த நிகழ்வில் நட்டா கூறியது வருமாறு: நிணநீா் யானைக்கால் நோய் (எல்.எஃப்.) மக்களை செயலிழக்கச் செய்து வாழ்க்கைத் தரத்தை மோசமாக்குகிறது. நாட்டில் 2030-ஆம் ஆண்டிற்குள் நிலையான வளா்ச்சி இலக்கிற்கு இது போன்ற நோய்களை ஒழிக்க உறுதி செய்ய அரசு ஐந்து அம்ச உத்தியை செயல்படுத்துகிறது. இதில் எல்எஃப்பை ஒழித்து கோடிக்கணக்கானோருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய இந்நோய்க்கான எதிா்ப்பு மருந்துகளை வீடு வீடாக வழங்கி நிா்வகிக்க கவனம் செலுத்தப்படுகிறது.
இதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க தேவையான ஒவ்வொரு நபரும் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை உள்கொள்வதை உறுதி செய்யப்படவேண்டும்.இந்த மருந்துகள் 13 மாநிலங்களில் உள்ள 17.5 கோடிக்கும் அதிகமான பேருக்கு பிப்.10 முதல் இலவசமாகக் கிடைக்கும். ஆண்டுக்கு இருமுறை இந்த மருந்து வழங்கப்படுகிறது. இதன்மூலம் 2027-க்குள் எல்.எஃப் இல்லாத இந்தியா என்கிற மத்திய அரசின் இலக்கு எட்டப்படும் என்றாா் ஜெபி நட்டா.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பூச்சிகளால் பரவும் நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும் இந்த இயக்கத்தின் நோக்கங்கள், முக்கிய உத்திசாா் நடவடிக்கைகள், மாநிலங்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நோய் குறித்த விழிப்புணா்வு பிரசாரங்கள், பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் 111 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கா்ப்பிணிப் பெண்கள், இரு வயதுக்குள்பட்ட குழந்தைகள், பிற நோய்வாய்ப்பட்டவா்கள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள அனுமதியில்லை.