அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்
``37,000 கி.மீ வேகத்தில் ராக்கெட்டை இயக்கும் இன்ஜின் தயாரிக்கிறோம்'' -ISRO தலைவர் நாராயணன் பெருமிதம்
இஸ்ரோ தலைவராக பொறுபெற்றுள்ள நாராயணனுக்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேலகாட்டுவிளையில் பாராட்டுவிழா நேற்று மாலை நடைபெற்றது. இஸ்ரோவில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் நாராயணனுக்கு விழா மேடையில் கிராம மக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, போலீஸ் எஸ்.பி.ஸ்டாலின் மற்றும் அரசியல்கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசுகையில், "என்மீது நம்பிக்கை வைத்து என்னை இஸ்ரோ தலைவராக தேர்வு செய்த பிரதமர் மோடிக்கும், இந்திய அரசுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன்பு இஸ்ரோவை வழி நடத்தியவர்கள் பெரும்பெரும் அறிஞர்கள். இந்த பொறுப்பு எனக்கு கிடைத்ததற்கு மக்களின் நன்மதிப்பும், இறைவனின் அருளும் முக்கிய காரணம் ஆகும்.
நான் படிக்கும்போது வகுப்பு கட்டமைப்பு சரியாக இல்லாவிட்டாலும் திறமையான ஆசிரியர்கள் இருந்தனர். நாட்டிற்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கிய இறைவனுக்கும், பெற்றோர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது முன்னேற்றத்திற்கு நண்பர்களும், உறவினர்களும் ஆதரவும் இருந்தது. இஸ்ரோ தலைவர் போன்று உயர் பதவி கிடைத்ததற்கு எனது தகுதியை காட்டிலும் முக்கிய காரணம் என்னுடன் பணியாற்றும் பணியாளர்கள் பங்கு மிக முக்கியம் ஆகும். எனது வாழ்வில் ஏற்பட்ட ஒவ்வொரு கஷ்டங்களுக்கும் எனக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் என் மனைவி மற்றும் குழந்தைகளும் இருந்தனர்.
மனிதனை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக திருப்பி கொண்டுவரும் திட்டம் 20,000 கோடி ரூபாய் மதிப்பில் துரிதமாக நடைபெற்று வருகிறது. பாரத விண்வெளி நிலையம் அமைக்க இஸ்ரோ சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக 2028-ம் ஆண்டில் முதல் ராக்கெட் அனுப்பப்பட உள்ளது. நிலவில் தரை இறங்கி, நிலவின் மாதிரியை கொண்டு வந்து ஆய்வு செய்ய சந்திரயான் 4 திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஜப்பானுடன் இணைந்து சந்திராயன் 5 திட்டத்தை செயல்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. 30 ஆயிரம் கிலோ எடையை சுமார்ந்து செல்லும் 1000 டன் எடையுள்ள ராக்கெட் ( NGLV ) தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. இதற்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. வெளிநாட்டின் 433 செயற்கை கோள்களை நமது ராக்கெட்டுகள் மூலம் அனுப்பி உள்ளோம். 37 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் ராக்கெட்டை இயக்கும் இன்ஜின் மகேந்திரகிரியில் தயாரிக்கப்பட்டுவருகிறது. சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டை கொண்டாடும்போது இந்தியா வல்லரசாக மாறும். இளைஞர்களும் மாணவர்களும் வெற்றியடையவேண்டும் என்றால் இறைவனின் அருளும், பெற்றோரின் ஆசீர்வாதமும் வேண்டும்" என்றார்.