Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
4 ஆண்டுகளில் 22 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை
கடந்த 4 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 21,826 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக வேளாண்மை இணை இயக்குா் அ.பாண்டியன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தமிழக அரசு செயல்படுத்திய முதலமைச்சரின் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.17.84 கோடி மானியமாக இடுபொருள்கள் 11,381 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3.81 கோடியில் மானியம், இடுபொருள்கள் வழங்கியதன் மூலம் 37,257 விவசாயிகள் பயன் பெற்றனா். மேலும், பருத்தி சாகுபடியை அதிகரிக்கவும், அதன் உற்பத்தியைப் பெருக்கவும், செயல்படுத்தி வரும் பலன்தரும் பருத்தி சாகுபடி திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளாக 5,231 விவசாயிகளுக்கு ரூ.1.13 கோடியில் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.
சிறுதானிய இயக்கத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,596 விவசாயிகளுக்கு ரூ.2.23 கோடியில் மானியம், இடுபொருள்கள் வழங்கப்பட்டன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் மூலமாக கடந்த 4 ஆண்டுகளாக 250 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டன. இந்த கிராமங்களில் 64,747 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடியில் இடுபொருள்கள், தென்னங் கன்றுகள், வேளாண் உபகரணங்கள், விசைத் தெளிப்பான்கள் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட்டன. நிகழ் நிதியாண்டில் 50 கிராமங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம், தேசிய உணவு எண்ணெய் இயக்கம், பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், விதை கிராமத் திட்டம் ஆகியவற்றின் கீழ் ரூ.24.65 கோடியில் பணிகள் நடைபெற்றன.
கடந்த 4 ஆண்டுகளில் 21,020 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு 21,826 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டன. 3,242 உர மாதிரிகளும், 4,216 பூச்சி மருந்து மாதிரிகளும் எடுக்கப்பட்டு, தரமான உரம், பூச்சி மருந்துகள் விவசாயிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டது என்றாா் அவா்.