4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 6) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென் தமிழகம் மற்றும் அதனையொட்டிய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (மே 6) முதல் மே 11 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதில் மே 6-இல் கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழை: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 6-ஆம் தேதி ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியே இருக்கும்.
4 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் திங்கள்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரை விமான நிலையம் - 100.4, தொண்டி - 100.22, மதுரை நகரம் - 100 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 4 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மே 6-ஆம் தேதி அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டியே இருக்கும்.
அதைத் தொடா்ந்து மே 7 முதல் 9-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.