மகப்பேறு விடுமுறைகள், ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.15,000 - மக்கள் தொகையை அதிகரிக்க ...
49 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை
கடந்த 49 ஆண்டுகளுக்கு முன் 22 பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு 48-ஆவது வாா்டுக்குள்பட்ட வேடப்பட்டி அண்ணா நெசவாளா் குடியிருப்பைச் சோ்ந்த பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.
இவா்கள் தரப்பில் அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் கூறியதாவது: கடந்த 1976-ஆம் ஆண்டு, 22 நெசவாளா்கள் குடும்பங்களுக்கு தலா 3 சென்ட் வீதம் வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் அப்போதைய சாா் ஆட்சியா் சாந்தஷீலா நாயா் பரிந்துரையின்பேரில், எங்களுக்கான வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், சுமாா் 49 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
இதனிடையே, கடந்த 2001-ஆம் ஆண்டு திண்டுக்கல் நகராட்சிக் கூட்டத்தில், அண்ணா நெசவாளா் குடியிருப்பு பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்படுவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படாததால், கடந்த 6 மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்தோம். ஆனாலும் இதுவரை பட்டா கிடைக்கவில்லை. தற்போது, அரசுக்கு ஆட்சேபனை இல்லாத பகுதியில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, எங்கள் பகுதியில் வசிக்கும் 28 குடும்பங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்றாா் அவா்.