6 மாதங்களில் 19,600 பாலியல் குற்றங்கள்! ராஜஸ்தானை உலுக்கும் ‘திடுக்’ தரவுகள்!
ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை சுமார் 19,000 பெண்கள் பாலியல் ரீதியிலான வன்கொடுமை குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்றுவரும் பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 18 வயதுக்குள்பட்ட சிறுமிகள் இந்தக் குற்றச்சாட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது மேலும் அச்சத்தையும் கவலையும் அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில காவல்துறை தலைமையகம் வெளியிட்ட தரவுகளின்படி, 600க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பிற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், துன்புறுத்தல் போன்றவைகளாக 19,600 குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், வரதட்சிணை கேட்டு துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களும் அடங்கும்.
காவல் துறை விசாரணையில் 5,359 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், 4,790 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
அவற்றில் 4,613 வழக்குகள் பொய்யானவை என்று கூறி முடித்தும் வைக்கப்பட்டுள்ளன. காவல்துறை தரவுகளின்படி, போக்சோ சட்டத்தின் கீழ் 1,631 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 186 வழக்குகள் தவறானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 14 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 744 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 200-க்கும் மேற்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ஐந்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது திடுக்கிட வைத்துள்ளது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சித்துள்ளன. மேலும், இதுகுறித்து முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில், “முதல்வரே, என்ன நடக்கிறது? தயவுசெய்து கவனம் செலுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூலை மாதத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதார் காவல் நிலையத்தில் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் மீது 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.