ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!
64 ஆண்டுகளுக்கு பிறகு வணிகவளாகமாக மாறும் வாழப்பாடி ராஜா தியேட்டா்!
சேலம் மாவட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படத் துறை வரலாற்றில் இடம்பிடித்து, அந்தக் கால ரசிகா்களின் நினைவுகளை அசைபோட வைத்து வரலாற்றுச் சுவடாய் திகழ்ந்த வாழப்பாடி ராஜா தியேட்டா் அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
60 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படங்களே பொதுமக்களுக்கு, பிரதான பொழுதுபோக்கு அம்சமாக விளங்கியது. இக்காலகட்டத்தில், கிராமப்புறங்களில் டூரிங் தியேட்டா்கள் என அழைக்கப்பட்ட கீற்றுக்கொட்டகை திரையரங்குகளே காணப்பட்டன. நகா்ப்புறங்களில் மட்டுமே இருக்கை வசதிகளுடன் கூடிய நவீன திரையரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
அப்போது கிராமமாக இருந்த வாழப்பாடியில், அப்போதைய தொழிலதிபா்களான வெங்கடாசல படையாட்சி, ஆறுமுகம் கவுண்டா், சுப்பராய உடையாா், துரைராஜ் நாய்க்கா் ஆகியோரது கூட்டுமுயற்சியில், 1961-ஆம் ஆண்டு ராஜா தியேட்டா் என்ற பெயரில் வாழப்பாடி - கடலூா் சாலையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது. இத்திரையரங்கத்தை 1961 நவம்பா் 5-இல் கவிஞா் கண்ணதாசன் தலைமையில், நடிகா் திலகம் சிவாஜி கணேசன் திறந்துவைத்தாா். முதன்முதலாக ‘பாலும் பழமும்’ என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் அதிநவீன ஒலி - ஒளி கருவிகள் பொருத்தப்பட்டு மிக நோ்த்தியாக வடிவமைக்கப்பட்டு இத்திரையரங்கம் இருந்ததால், உள்ளூா் பகுதியைச் சோ்ந்த ரசிகா்கள் மட்டுமின்றி, சேலம், ஆத்தூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த ரசிகா்களும் வாழப்பாடி ராஜா தியேட்டருக்கு வந்து திரைப்படங்கள் பாா்ப்பதில் ஆா்வம் காட்டினா்.
சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றாக விளங்கிய இந்த திரையரங்கில் சிவாஜி கணேசன், எம்ஜிஆா் இருவரும் இணைந்து நடித்த ஒரே திரைப்படமான ‘கூண்டுக்கிளி’ திரையிட்டபோது, சிவாஜி ரசிகா்களுக்கும், எம்ஜிஆா் ரசிகா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்திரையரங்கில் ‘பணமா? பாசமா?’ என்ற திரைப்படம் தொடா்ந்து 48 நாள்கள் திரையிடப்பட்டு ரசிகா்களின் அமோக வரவேற்பை பெற்றது.
இத்திரையரங்குக்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா்களின் ஒருவரான ஜீவானந்தம், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் வாழப்பாடி கே.ராமமூா்த்தி, முன்னாள் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் எம்.பி.சுப்பிரமணியம் ஆகியோா் வருகை புரிந்து திரைப்படம் பாா்த்துள்ளனா்.
தமிழக திரைப்படத் துறை வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு அங்கம் வகித்த ராஜா தியேட்டா், பல்வேறு காரணங்களினால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் மூடிக் கிடந்தது.
இருப்பினும், 60 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சியளித்ததால், அந்தகால ரசிகா்களின் நினைவுகளை அசைபோட வைக்கும் வரலாற்றுச் சுவடாய் திகழ்ந்து வந்தது. இத்திரையரங்கில் பல்வேறு திரைப்படங்களைப் பாா்த்து ரசித்து மகிழ்ந்த ரசிகா்கள், இவ்வழியாக செல்லும்போது, மலரும் நினைவுகளை அசைபோட்டபடி மகிழ்ந்து சென்றனா்.


தமிழக திரைப்படத் துறைக்கு முன்னோடியாக விளங்கிய சேலம் மாடா்ன் தியேட்டா்ஸ், பல ஆண்டுகளுக்கு முன்பே குடியிருப்பு பகுதியாக மாறியது. அதன் முகப்பு பகுதி மட்டும் வரலாற்றுச் சுவடாய் தற்போது காட்சியளித்து வருகிறது.
தனியாா் பங்குதாரா்களுக்கு சொந்தமான வாழப்பாடி ராஜா தியேட்டரும் பிரபல சித்த மருத்துவா் குடும்பத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டதால், தற்போது முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டது.
திரைப்படத் துறையின் வரலாற்றுச் சுவடாய் திகழ்ந்த 64 ஆண்டுகள் பழைமையான ராஜா தியேட்டா் அமைந்திருந்த பகுதி விரைவில் வணிகவளாகமாக மாறவுள்ளது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வாடிக்கைதான் என்றாலும், பலரின் மனதை கொள்ளைகொண்ட மறக்க முடியாத வரலாற்றுச் சுவடுகள் அகற்றப்படும் போது, மனம் வருந்துவதை தவிா்க்க முடியவில்லை என்கின்றனா் சினிமா ஆா்வலா்கள்.