8-வது இடத்துடன் ஐபிஎல் தொடரை நிறைவு செய்த நடப்பு சாம்பியன்; பேட்ஸ்மேன்களை குறைகூறும் ரஹானே!
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாததற்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஃபார்மே காரணம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: தோனியிடம் எப்போதும் கேட்கப்படும் கேள்வி; பதிலால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்!
நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தமுள்ள 14 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. இதன் மூலம், 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடம் பிடித்து நடப்பு ஐபிஎல் தொடரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிறைவு செய்துள்ளது.
சிறப்பாக அமையாததன் காரணம் என்ன?
நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் சிறப்பாக அமையாததற்கான காரணத்தை அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எங்கள் அணியில் 3-4 பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லை. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், எங்களால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் பேட்டிங்கில் நன்றாக செயல்படவில்லை. ஆனால், இந்த சூழ்நிலையை கையாளும் அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. அடுத்த சீசனில் வலுவாக திரும்பி வருவோம் என்றார்.
இதையும் படிக்க: அபார வெற்றியுடன் நடப்பு ஐபிஎல் தொடரை நிறைவு செய்த சிஎஸ்கே!
கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக அமைந்த ரிங்கு சிங், ரமன்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸல் போன்ற வீரர்கள், நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிதாக சோபிக்காதது குறிப்பிடத்தக்கது.