ADMK: `ஜெயலலிதாவை அவமதித்து விட்டார்கள்; செங்கோட்டையன் செய்தது சரிதான்' -டிடிவி தினகரன் சொல்வதென்ன?
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதாக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே அ.தி.மு.கவினர் நேற்று (9.2.2025) நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது அ.தி.மு.க-விற்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், “அத்திக்கடவு - அவிநாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
![எடப்பாடி, செங்கோட்டையன்](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/by43pf88/Sengottaiyan-3.jpg)
தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அத்திக்கடவு அவினாசி திட்ட பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், “ அத்திகடவு அவினாசி திட்டம் வர காரணமாக இருந்த ஜெயலலிதாவின் படமோ, எம்ஜிஆர் படமோ இடம் பெறாத காரணத்தால் செல்லவில்லை என்று ஜெயலலிதாவின் தொண்டனாக செங்கோட்டையன் கூறி இருப்பது சரியானதுதான். அவரது கருத்தை நானும் ஜெயலலிதாவின் தொண்டனாக ஏற்கிறேன்.
செங்கோட்டையன் மூத்த அதிமுக நிர்வாகி, கட்சி தொடங்கியதில் இருந்து இருக்கிறார், 1977 முதல் எம்எல்ஏவாக இருக்கிறார். அவரது உணர்வை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு அதிமுகவை கேடயமாக எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்தி வருகிறார். இதே நிலையை எடப்பாடி தொடர்வதற்கு அதிமுகவில் உள்ளவர்கள் காவடி தூக்கினால் 2026-ல் அதிமுகவிற்கு எடப்பாடி பழனிச்சாமி மூடுவிழா நடத்துவார் என்பதை அதிமுகவில் உள்ளவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கான பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெற வேண்டும் என்பது அடிப்படையான விஷயம். ஜெயலலிதா அவர்கள் முன்னாள் முதலமைச்சர். அரசியலை தாண்டி அவர் அந்த திட்டத்திற்கு அடித்தளமாக இருந்தவர். இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியின் நீட்சியாகதான் எடப்பாடி பழனிசாமி அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார். எனவே இவர்களின் படங்களை வைக்கவில்லை என்று கூறுவது இருபெரும் தலைவர்களையும் அசிங்கப்படுத்தும் வகையில் இருப்பதாகத்தான் பார்க்கிறேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs