தலைக்கேறிய மதுபோதை; நடுரோட்டில் திமுக பிரமுகர் செய்த ரகளை! -வைரலான வீடியோ... கைது செய்த போலீஸ்!
கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (51). இவர் தி.மு.க-வில் வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராக இருக்கிறார். அவ்வப்போது கோவிந்தராஜ் அடாவடிகளில் ஈடுபடுவார் என்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக ஜே.சி.பி இயந்துரத்துடன் மாநகராட்சி ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது ஜே.சி.பி இயந்திரத்தின் சாவியை பிடிங்கியதுடன் அதன் மீது ஏறி நின்று ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுத்ததாக சொல்லப்படுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/3ctdzgys/2a6bc7d6_cdac_4da5_bb2a_61a03422fb79.jpg)
தி.மு.க முக்கியஸ்தர் ஒருவருக்கு ஆதரவாக கோவிந்தராஜ் இப்படி நடந்து கொண்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் கோயில் வடக்கு வீதியில் எராளமான பூக்கடை உள்ளிட்ட கடைகள் உள்ளன. பூக்கள் வாங்குவதற்கு வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் பலரும் வருவதால் அந்த கடைவீதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை கோவிந்தராஜ் மது போதை தலைக்கேறிய நிலையில் அங்கு வந்துள்ளார்.
திமுக கரைவேட்டி கட்டியிருந்த அவர் பூக்கடை பகுதியில் நீண்ட நேரம் ரகளை செய்துள்ளார். தலையில் முண்டாசுடன், கால்சட்டை தெரிய வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு கடைகள் முன்பு நின்ற டூவீலர்களை கீழே தள்ளி விட்டு சேதப்படுத்தினார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/qahgimbq/90e8057d_7bbd_4058_9427_368738ea2f86.jpg)
சைக்கிள் ஒன்றை தூக்கி போடும் போது தடுமாறி கீலே விழுந்த கோவிந்தராஜை ஒருவர் தூக்கி அழைத்துச் செல்ல, அப்போது பொதுவாக தகாத வார்த்தைகளால் திட்டினார். ஆளும்கட்சி பிரமுகர் வர்த்தகர்களுக்கு இப்படி இடையூறு செய்யலாமானு வியாபாரிகள் நொந்துக்கொண்டனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/nje7pfua/8bd8ee87_b612_40ae_a01c_3fbb84fecdce.jpg)
இது குறித்து, பூக்கடை உரிமையாளரான சிவா, கும்பகோணம் கிழக்கு போலீஸில் புகார் அளித்தார். அதில், துக்க நிகழ்ச்சியை அனுசரிப்பதற்காக பூக்கடைகளை மூடிவிட்டு, மீண்டும் மாலையில் பூக்கடைகளைத் திறந்தோம். அப்போது, கோவிந்தராஜ் கடைகளையும், வாகனங்களையும் உடைத்து ரகளை செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் கோவிந்தராஜை கைது செய்தனர். இது குறித்து பேசிய சிலர், ``கோவிந்தராஜ் போதையில் செய்த ரகளையை செல்போனில் வீடியோ எடுத்த சிலர் அதை சமூக வலைதளங்களில் பதிவிட வைரலானது. அதன் பிறகே போலீஸ் அவர் மீது நடவடிக்கை எடுத்தது'' என்றனர்.