அதிமுகவிற்கு பாஜக சுமையா? - சீமான் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் பதில்
Empowerment: திருநங்கைகளும் குடும்ப வன்முறை வழக்கு தொடர முடியுமா?
திருமண வாழ்வில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் திருநங்கைகளும், தன் கணவர் மற்றும் கணவருடைய குடும்பத்தினர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A-ன் கீழ் குடும்ப வன்முறை வழக்கு தாக்கல் செய்யலாம்; அது அவர்களது உரிமை என உத்தரவிட்டுள்ளது ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்றம்.

திருநங்கையான போகலா சபானா, கணவர் விஸ்வநாதன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தன்னை கொடுமை செய்வதாக குற்றம் சாட்டி ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை வழக்கொன்றை சில தினங்களுக்கு முன்னால் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, "இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 498Aன் கீழ், கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் மீது குடும்ப வன்முறை வழக்கு தொடர பெண்களுக்கு மட்டுமே உரிமையுண்டு; திருநங்கைகளுக்கு அந்த உரிமை இல்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என சபாலாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வேங்கட ஜோதிர்மை பிரதாபா, "திருமண வாழ்விலுள்ள திருநங்கை குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டால், அவருக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A-ன் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முழு உரிமையுண்டு என்பதை இந்த நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது" என தீர்ப்பளித்தார்.

ஆந்திர நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக் குறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் சாந்தகுமாரி, "திருநங்கைகளின் உரிமைகள் என தனியாக எதையும் நாம் பிரித்து பார்க்கக் கூடாது. திருநங்கைகளுக்கான உரிமைகள் என தனியாக பிரித்துப் பார்த்தால் அது அவர்களை ஆதரிக்க வேண்டுமென்ற நோக்கில் மட்டும்தான் இருக்க வேண்டும். பூமியில் பிறந்த அனைவருக்கும் இருக்கக்கூடிய அனைத்து உரிமைகளும் திருநங்கைகளுக்கும் உண்டு என நான் நினைக்கிறேன். காரணம் என்னவென்றால், உலகில் பிறந்த அனைவருக்கும் வன்முறையற்ற உலகம் வேண்டும்; யாரும் யார் மீதும் வன்முறை காட்டக்கூடாது.
'ஒரு கணவர் தன் திருநங்கை துணை மீது வன்முறை காட்டினால் அது வன்முறை இல்லையா... திருநங்கைக்கு மட்டும் குடும்ப வன்முறை குறித்து புகார் தெரிவிக்க உரிமையில்லாமல் போய்விடுமா...' என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். குடும்ப வன்முறை குறித்து புகாரளிக்கும் உரிமை எல்லோருக்கும் பொதுவானது என்பதால், திருநங்கை என காரணம் காட்டி குடும்ப வன்முறை வழக்கு தாக்கல் செய்ய உரிமையில்லை என மறுக்க இயலாது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 498A, கணவர் மற்றும் கணவரின் உறவினரால் மனைவிக்கு இழைக்கப்படும் வன்முறைக்கான தண்டனை குறித்து விவரிக்கிறது. இந்த பிரிவின் கீழ், திருநங்கைகளுக்கு வழக்கு தாக்கல் செய்ய உரிமையில்லை என கூற எவருக்கும் உரிமையில்லை. தவறான வாதத்தை எதிர்த்து சிறப்பாக தீர்ப்பளித்துள்ள ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், திருநங்கைகளை 'பெண்கள்' என்ற அடையாளக் குறியீட்டிற்குள் வகைப்படுத்திப் பார்க்க வேண்டும் என பல வழக்கின் தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் என்ற அடையாளத்தோடுதான் திருநங்கையர் வாழ்ந்து வருகின்றனர். ஆகையால், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498Aன் கீழ் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் மீது குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்ய திருநங்கைகளுக்கு முழு உரிமையுண்டு.
இந்திய மருத்துவ கவுன்சில் முன்னர் குறிப்பிட்டிருப்பதைபோல, திருநங்கையர் மற்றும் திருநம்பியரை பிறவிக்கோளாறு என குறிப்பிடக்கூடாது. அது இயற்கையாய் நடைபெறும் மாற்றம்தான். திருநங்கைகளை குறைபாடு உடையவராக பார்க்கக்கூடாது என நீதிமன்றம் சொல்வதைத்தான் நான் சரியானதாகக் கருதுகிறேன். நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள், நெறிமுறை கோட்பாடுகள் மற்றும் ஆர்ட்டிகிள் 15(3), பெண்களுக்கு எதிராக அபாயகரமான சம்பவங்களோ அல்லது வன்முறைகளோ நிகழ்த்தப்படக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது. அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் உரிமைகளென்பது இந்திய தேசத்திலுள்ள அனைவருக்கும் பொதுவானது என்பதால் திருநங்கையருக்கு எந்த உரிமைகளும் வழங்க இயலாது என மறுத்தல் கூடாது. எனவே, திருநங்கையரின் உரிமையை அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது பாராட்டத்தக்கது" எனக் கூறினார் வழக்கறிஞர் சாந்தகுமாரி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR