'என் அப்பா பணத்தை தவறான வழியில்...' - ஆதவ் அர்ஜூனா மீது லாட்டரி மார்ட்டின் மகன் ...
Empuraan: எம்புரான் படத்தில் இடம்பெற்ற அரசியல் விமர்சனங்கள்... சமூக வலைதளங்களை சூடாக்கும் பதிவுகள்!
மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள எம்புரான் சினிமா கடந்த 27-ம் தேதி ரிலீஸ் ஆனது. லூசிபர் சினிமாவின் இரண்டாம் பாகமான எம்புரான் சினிமா, ரிலீசுக்கு முன்பே சுமார் 50 கோடி ரூபாய்க்கு டிக்கெட் முன்பதிவு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எம்புரான் சினிமாவில் பா.ஜ.க, காங்கிரஸ், சி.பி.எம் கட்சிகளை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் சூடான பதிவுகள் வலம்வருகின்றன. குஜராத் கலவரம் காரணமாக சங்பரிவார் ஆட்சி அதிகாரத்தை பிடித்ததாக பா.ஜ.க-வுக்கு எதிரான கருத்துக்கள் எம்புரான் சினிமாவில் உள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினீஸ் கொடியேரி முகநூல் பக்கத்தில் கருத்து பகிர்ந்திருந்தார். இதையடுத்து சங்பரிவார் ஆதரவாளர்கள் எம்புரான் சினிமாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் எம்புரான் சினிமா பார்ப்பதற்காக முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்துசெய்து அதன் ஸ்கிரீன்ஷாட்டுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர். பா.ஜ.க-வைச் சேர்ந்த லஸிதா பாலக்கல் உள்ளிட்டவர்கள் எம்புரான் சினிமாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மோகன்லாலின் கர்னல் பதவியை (கவுரவ ராணுவ பதவி) திரும்பப்பெற ஜனாதிபதிக்கு மனு அளிக்க வேண்டும் என்றும்... பிரித்விராஜ் வீட்டில் இ.டி ரெய்டு நடத்த வேண்டும் எனவும் சங்பரிவார் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தங்கள் சமூக வலைதள பக்கத்தில் மட்டும் அல்லாது நடிகர்கள் மோகன்லால், பிரித்விராஜ் ஆகியோரது பதிவுகளிலும் பின்னூட்டமாக தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்துவருகின்றனர். அதே சமயம் மோகன்லாலுக்கும், பிரித்விராஜிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ள கேரள மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரசேகர், வரும் நாட்களில் எம்புரான் சினிமா பார்க்க உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் உள்ளதை கிண்டல் செய்யும் விதமாகவும் காட்சி அமைப்புகள் உள்ளதாக காங்கிரஸ் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், கம்யூனிஸ்ட் கட்சியை கிண்டலடிக்கும் வகையிலும் சில காட்சிகள் எம்புரானில் உள்ளதாக சைபர் அட்டாக் நடத்தப்பட்டுவருகிறது. கேரளாவின் முக்கியமான மூன்று கட்சிகளையும் எம்புரான் அட்டாக் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.