Green Rose : கோடையை வரவேற்க ஊட்டியில் பச்சை ரோஜா பூத்தாச்சு! - எங்கே போகணும் தெரியுமா?
இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளில் கோடை வாசஸ்தலங்ளை நிறுவுவதில் தீவிரம் காட்டினர். வாட்டும் தென்னிந்திய வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்களை நிர்மாணித்தனர்.
ஆடம்பரமான வாழிடச் சூழலை உருவாக்கியதுடன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தாவர இனங்களை கப்பல்கள் மூலம் தருவித்து இங்கு அறிமுகம் செய்தனர். 200 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த கோடை வாசஸ்தலங்கள் இன்றளவும் சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்குரிய தேர்வாக இருக்கின்றன.

ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டு தற்போது தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு பூங்காக்களைத் தொடர்ந்து பொலிவுப்படுத்தி வருகின்றனர்.
கோடை சீசனை நெருங்கி வரும் நிலையில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மேலை நாட்டு கவிஞர்கள் கொண்டாடும் டஃபோடில்ஸ் முதல் தனித்துவமான பச்சை நிற ரோஜாக்கள் வரை மலர் மாடங்களில் அலங்காரிக்கச் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அரிய பச்சை நிற ரோஜாக்கள் நீலகிரியில் உள்ள அரசு பூங்காக்களில் பூத்திருக்கும் நிலையில், தவறாமல் இவற்றை கண்டு ரசிக்க பூங்கா அதிகாரிகள் சுற்றுலா பயணிகளை வரவேற்று வருகின்றனர்.
பச்சை ரோஜா
பச்சை ரோஜா குறித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், " rosa chinensis viridi flora என அழைக்கப்படும் பச்சை நிற ரோஜாவை சீன ரோஜா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்கா மற்றும் குன்னூரில் இருக்கும் அரசு பூங்காவான சிம்ஸ் பூங்காவிலும் பராமரித்து வரப்படுகிறது. இந்த இரண்டு பூங்காக்களிலும் தற்போது இந்த பச்சை ரோஜாக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

பூங்காக்களில் ஆயிரக்கணக்கான ரோஜா ரகங்கள் இருந்தாலும் இதுபோன்ற தனித்துவமான ரோஜாவை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த இரண்டு பூங்காக்களிலும் பச்சை ரோஜாவை கண்டு ரசிக்கலாம். பச்சை ரோஜாக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன் அவர்களின் வீடுகளில் வளர்க்கும் வகையிலும் பச்சை ரோஜா நாற்று உற்பத்தியை அதிகரித்து விற்பனை செய்யும் முயற்சியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.