இஸ்ரேல்-காசா போர்:`விரைவில் போர் நிறுத்தம்?' - நெதன்யாகு; ட்ரம்ப் அதிருப்தி, நெர...
Ind vs Pak: "என் வாழ்வின் ஸ்பெஷல் இன்னிங்ஸ்; எல்லா இந்தியர்களுக்கும் சமர்ப்பணம்" - ஆட்ட நாயகன் திலக்
ஆசிய கோப்பை தொடரின் 41 வருட வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 28) இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் ஓப்பனர்கள் ஃபர்கான் (57), ஃபக்கர் ஜமாம் (46) நல்ல அடித்தளம் கொடுத்ததும் 146 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்.

இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்தியா அணியில் 20 ரன்களுக்குள் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் காலி.
இந்த இக்கட்டான சூழலில் கைகோர்த்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன் கூட்டணி பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்கள் அடித்து நங்கூரமிட்டனர்.
ஒரு கட்டத்தில் சாம்சனும் அவுட்டானதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே பாகிஸ்தான் பவுலர்களுக்கு அதிரடி காட்டி, திலக் வர்மா மீதிருந்த அழுத்தத்தை திசைதிருப்பினார்.
அதற்கேற்றாற்போல திலக் வர்மா நிதானமாக அரைசதம் அடித்தார்.
பின்னர், கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரின் கடைசி பந்தில் 33 ரன்களில் ஷிவம் துபே அவுட்டாக, கடைசி 6 பந்துகளில் 10 எடுத்தால் சாம்பியன் எனும் நிலைக்கு வந்தது இந்தியா.
ஹாரிஸ் ராஃப் வீசிய 2-வது பந்தில் திலக் வர்மா சிக்ஸ் அடித்து இந்தியா 9-வது முறையாக ஆசிய கோப்பை வெல்வதை உறுதிசெய்துவிட்டார்.

அடுத்த பந்தில் திலக் வர்மா சிங்கிள் எடுக்க, ரின்கு சிங் ஃபோர் அடித்து ஆட்டத்தை முடித்தார்.
69 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இந்தியாவை வெற்றி பெறவைத்த திலக் வர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது விருது வழங்கப்பட்ட்டது.
விருது வென்ற பிறகு பேசிய திலக் வர்மா, " அழுத்தமாக தான் இருந்தது. அவர்கள் நன்றாகப் பந்துவீசினார்கள். மெல்ல மூச்சிழுத்து நிதானமாக இருக்க முயற்சித்தேன்.
சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அழுத்தமான சூழலில் துபே ஆடிய விதம் உதவிகரமாகவும், நாட்டுக்கு முக்கியமானதாகவும் இருந்தது.
எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய நான் தயாராக இருந்தேன். பிட்ச் மெதுவாகவும் இருக்கும்போது கம்பீரிடம் பேசினேன்.
கடினமாக பயிற்சி செய்தேன். என் வாழ்வின் மிகச்சிறப்பான இன்னிங்ஸ்களில் ஒன்று இது. அனைத்து இந்தியர்களுக்கும் இது சமர்ப்பணம்" என்று கூறினார்.