IPL 2025: 'குஜராத்துக்கு பட்லர்; ஆர்சிபிக்கு ஹேசல்வுட்!'- ஐ.பி.எல் யை தவறவிடும் வீரர்களின் பட்டியல்
இந்தியா - பாகிஸ்தான் பதற்ற நிலை காரணமாக இடையிலேயே நிறுத்தப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடர் வருகிற 17 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிய வெளிநாட்டு வீரர்களில் யார் யாரெல்லாம் மீண்டும் ஐ.பி.எல் இல் ஆட வருவார்கள்? அப்படி ஆட வருபவர்களில் எல்லாருமே தொடர் முழுவதும் இருந்து ஆடுவார்களா? எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.
மீண்டும் ஐ.பி.எல்... மிஸ்ஸாகும் வீரர்கள்!
மே 8 ஆம் தேதி பஞ்சாப் - டெல்லி இடையிலான போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது. மறுநாளே ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல் போட்டிகளை ஒத்திவைப்பதாக அறிவிப்பும் வெளியானது. உடனடியாக ஒவ்வொரு அணியின் வெளிநாட்டு வீரர்களும் அவரவர் நாட்டு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலைமை சீரான நிலையில் மீண்டும் மே 17 ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்தான் வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் ஆட இந்தியா திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு திரும்பினாலும் ப்ளே ஆப்ஸில் நிறைய வீரர்களால் ஆட முடியாத சூழல் நிலவுகிறது.
ஏனெனில், ஜூன் 11 ஆம் தேதி ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி நடக்கவிருக்கிறது. அதற்காக, இரு அணிகளும் மே கடைசி வாரத்தில் இருந்தே பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.

அதேமாதிரி, இங்கிலாந்துக்கும் வெஸ்ட் இண்டீஸூக்கும் இடையேயான ஓடிஐ தொடரும் மே 29 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. ஆக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என 4 நாடுகளை சேர்ந்த வீரர்களும் ப்ளே ஆப்ஸில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
பெங்களூரு அணிக்காக ஆடி வரும் ஹேசல்வுட் காயத்தில் இருக்கிறார். அதனால் அவர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதேமாதிரி, டெல்லி அணிக்காக ஆடி வரும் ஸ்டார்க்கும் பஞ்சாப் அணிக்காக ஆடி வரும் ஸ்டாய்னிஸ், ஜாஸ் இங்லிஸ் ஆகியோரும் இந்தியாவிற்கு மீண்டும் திரும்ப வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

குஜராத்துக்காக ஆடி வரும் பட்லர், ரூதர்போர்ட் பெங்களூருவுக்காக ஆடி வரும் ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட், லுங்கி இங்கிடி மும்பை இந்தியன்ஸின் வில் ஜாக்ஸ், கார்பின் போஸ்ச் ஆகியோர் ப்ளே ஆப்ஸ் சமயத்தில் இருக்கமாட்டார்கள் என்பதே இப்போதைய நிலவரமாக இருக்கிறது. சென்னை அணியின் ஜேமி ஓவர்டனும் ரச்சின் ரவீந்திராவும் மட்டுமே இந்தியாவுக்கு திரும்புவது சந்தேகமாக இருக்கிறது.
ப்ளே ஆப்ஸ் செல்லும் அணிகள் சில முக்கிய வீரர்களை இழப்பது அவர்களுக்கு பெரும் பின்னடைவாகவே அமையும்.!