Israel: ``இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?'' - ஐ.நா-வில் நெதன்யாகு
இஸ்ரேல் - பாலஸ்தீனம்
இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தி 251 இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்ற அடுத்த நாள் முதல், சுமார் இரண்டாண்டுகளாகப் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் நடத்திவருகிறது.
இப்போரில் 20,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 65,000-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
உயிரைப் பிடித்துக்கொண்டு காஸாவில் முகாம்களில் அடைக்கலம் புகுந்திருக்கும் பாலஸ்தீனியர்களுக்கு உதவ உலக நாடுகள் அனுப்பி வைக்கும் நிவாரண உதவிகளை இஸ்ரேல் படைகள் தடுக்கின்றன.

இந்தப் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் பலவும் மனிதாபிமான குரலை இஸ்ரேலை நோக்கி உரைத்தாலும், அமெரிக்காவின் உதவியோடு இனப்படுகொலை நடவடிக்கையை அந்நாட்டு அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்தவர் இருக்கிறார்.
பிணைக்கைதிகளை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்று தனது தாக்குதலுக்கு காரணமும் கூறுகிறார்.
அதேவேளையில், இஸ்ரேலின் போரை `இனப்படுகொலை' என ஐ.நா விசாரணை ஆணையம் கூறியிருக்கிறது.
இவற்றுக்கு மத்தியில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க ஐ.நா-விழும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அந்தத் தீர்மானத்தில் இந்தியா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து (UK), கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில், போர்ச்சுகல் என 157 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன.
இந்த நிலையில், ஐ.நா பொதுச் சபையின் 80-வது அமர்வில் உரையாற்ற இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்துக்கு வருகை தந்தார்.

அப்போது ஐ.நா-வில் நெதன்யாகு உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடந்தது.
அதேபோல், ஐ.நா அவையில் உரையாற்ற நெதன்யாகு மேடைக்கு செல்லும்போது பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் உலக நாடுகளின் பிரதிநிதிகள் அவையிலிருந்து வெளியேறினார்.
கிட்டத்தட்ட காலி இருக்கைகளால் நிரம்பியிருந்த அவையில்தான் நெதன்யாகு உரையாற்றினார்.
நெதன்யாகு உரை
தன்னுடைய உரையில் ஹமாஸை எச்சரித்த நெதன்யாகு, "ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எங்கள் மக்களை விடுவியுங்கள் (ஹமாஸ்). அப்படிச் செய்தால் நீங்கள் உயிர் வாழலாம். இல்லையெனில் இஸ்ரேல் உங்களை வேட்டையாடும்" என்றார்.
மேலும், இஸ்ரேலின் செயலை இனப்படுகொலை என்று ஐ.நா விசாரணை ஆணையம் குறிப்பிட்டதை மறுத்த நெதன்யாகு, "இஸ்ரேல் வேண்டுமென்றே பொதுமக்களைக் குறிவைக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு நேர்மாறானது.
காஸாவை விட்டு வெளியேறுமாறு பொதுமக்களுக்கு மில்லியன் முறை கூறினோம்.

இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் ஆபத்திலிருந்து வெளியேறுமாறு கெஞ்சுமா... நாஜிக்கள் யூதர்களை வெளியேறச் சொன்னார்களா"என்று கேள்வி எழுப்பினார்.
அவர் உரையாற்றி முடித்த பிறகு, காலி அவையில் இருந்த இஸ்ரேல் பிரதிநிதிகளும், அமெரிக்க பிரதிநிதிகளும் எழுந்து கைதட்டினர்.