நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!
Kerala: பழங்குடி இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம்.. நடந்தது என்ன?
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ (20) என்பவரின் ஆடைகளை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக புகார் எழுந்தது.
கடந்த 24-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இளைஞர் சிஜூ-வை ஒருவர் கயிற்றால் கட்டி வைத்திருக்கும் வீடியோவில் பேசும் சிஜூ, கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு உள்ளதாக கூறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
சிஜூ-வை கயிற்றால் கட்டி பிடித்து வைத்திருந்தவர், இளைஞர் தன்னை கடித்ததாக கூறும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

பால் கொண்டு சென்ற பிக்கப் வாகனத்தின் குறுக்கே பாய்ந்ததுடன், வாகனத்தை கல்லால் எறிந்து உடைத்ததாக சிஜூ மீது பிக்கப் வாகன உரிமையாளரின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதுபற்றி விசாரிக்க சிஜூ-வை அழைத்தபோது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் கால் இடறி வாகனத்தின் முன்பு விழுந்த பட்டியலின இளைஞரை வேண்டும் என்றே கட்டி வைத்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 24-ம் தேதி சிஜூ கோட்டத்தறா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அப்போது மருத்துவமனையில் இருந்து போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்தது.
இப்போது வீடியோ வெளியானதைத் தொடர்ந்தே இந்த விவகாரம் பேசுபொருளானது.
அட்டப்பாடியில் மது என்ற பழங்குடியின இளைஞர் கடைகளில் உணவு திருடியதாக கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த சம்பவம் கடந்த 2018-ம் ஆண்டு அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ கட்டி வைத்து தக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்று சிஜூ-விடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றனர்.

சிஜூ அளித்த புகாரின் அடிப்படையில், அவரை தாக்கியதாக பால் வண்டி டிரைவர் சோலையூரைச் சேர்ந்த ரெஜி மேத்யூ(21), கிளீனர் ஆலப்புழாவைச் சேர்ந்த விஷ்ணுதாஸ்(31) ஆகியோரை அகளி போலீஸார் கைது செய்தனர்.
கோவையில் வைத்து அவர்களை கைது செய்த போலீஸார் மண்ணார்க்காடு பழங்குடியினர் பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.