கீழடி: "தமிழர் வரலாற்றை மறைப்பது ஏன்?" - மாஃபா பாண்டியராஜனுக்கு எழிலன் பதிலடி!
Kuberaa Review: நடிப்பை அள்ளி வழங்கும் `குபேரன்' தனுஷ்; ஆழமான எமோஷன்ஸ்; சுவாரஸ்யமான படமாக மாறுகிறதா?
வங்கக் கடலில் பெரிய அளவிலான எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் முழு உரிமையையும், மத்திய அமைச்சரிடம் லஞ்சம் கொடுத்துப் பெறுகிறார் கார்ப்பரேட் முதலாளியான நீரஜ் (ஜிம் சர்ப்).
அதற்கான லஞ்சப் பணமான ஒரு லட்சம் கோடியை, சம்பந்தப்பட்டவர்களுக்குப் பிரித்தளிக்க முடிவு செய்கிறார்கள். நேர்மையாக இருந்ததால், பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் சி.பி.ஐ அதிகாரி தீபக்கை (நாகர்ஜுனா) மூளைச் சலவை செய்து இந்தப் பணியில் அமர்த்துகிறார் நீரஜ்.
அப்பணியைக் கையிலெடுக்கும் தீபக், லஞ்சப் பணத்தை வெள்ளைப் பணமாக்க, போலியாகச் சில பினாமிகளை உருவாக்க முடிவெடுக்கிறார்.
இதற்காக நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து, நான்கு யாசகர்களைக் கூட்டி வருகிறார்.
அதில், திருப்பதியிலிருந்து கூட்டிவரப்பட்ட தேவாவும் (தனுஷ்) ஒருவர்.
அவர்களைப் பணக்காரர்களைப் போல நடிக்க வைத்து, தங்களின் காரியத்தை முடிக்க முடிவெடுக்கிறார்கள். இந்தப் பயணத்தில் இதற்கடுத்து நடக்கும் சம்பவங்களே சேகர் கம்முலா இயக்கியிருக்கும் தெலுங்குப் படமான 'குபேரா' படத்தின் கதை.
ஏதும் அறியா யாசகர் வாழ்க்கை, அதிலிருந்து பணக்கார வேடம் தரிக்கும் நாள்கள், வஞ்சிக்கப்பட்டு மீண்டும் வீதிக்கும் வரும் அவலத் தருணம் என வீரியமான கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வழங்கி ஒவ்வொரு ப்ரேமிலும் அழுத்தந்திருத்தமாக அமர்கிறார் தனுஷ்.
முக்கியமாக, பணக்காரராக நடிக்கும் இடங்களில் உடல்மொழி, பேச்சு என நுணுக்கமான நடிப்பைக் கொடுத்து படத்திற்கு வலுசேர்க்கிறார்.
குற்றவுணர்ச்சியோடு பரிதவிக்கும் நேர்மையான அதிகாரியாகவும், குடும்பத்தைப் பாதுகாக்கப் போராடும் இடங்களில் கணவனாகவும் ஆர்ப்பாட்டமில்லாத முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார் நாகர்ஜுனா.

தானும் ஒரு வகையில் குற்றவாளிதான் என்பதை உணருமிடத்தில் அவரின் அனுபவ நடிப்பு கைகொடுத்திருக்கிறது.
டெம்ப்ளட் கார்ப்பரேட் வில்லன் ஆக வேண்டிய கதாபாத்திரத்தை தன் உடல்மொழியால், தனித்துத் தெரிய வைக்கிறார் ஜிம் சர்ப்.
தன் அப்பாவித்தனத்தால் தேவையான காட்சிகளில் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறார் ராஷ்மிகா மந்தனா. சாயாஜி சிண்டே, சுனைனா, ஹரீஷ் பேரடி, மற்றொரு யாசகராக வரும் திவ்யா ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
மும்பை நகரையும், கார்ப்பரேட் உலகத்தையும் காட்டும்போது பிரமாண்டத்தையும், உணர்வுபூர்வமான இடங்களில் நுணுக்கத்தையும் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி.
முக்கியமாக, இரவு நேரக்காட்சிகளிலும், துரத்திப் பிடிக்கும் காட்சிகளிலும் கவனிக்க வைக்கிறார்கள்.
நீண்ட திரைக்கதையை, முடிந்தளவிற்குச் சுவாரஸ்யம் குறையாமல் கோர்த்திருக்கும் படத்தொகுப்பாளர் கார்த்திகா ஶ்ரீனிவாஸ், இரண்டாம் பாதியில் இன்னும் கயிற்றை இறுக்கத் தவறுகிறார்.

தேவி ஶ்ரீபிரசாத் இசையில், 'என் மகனே', 'எனது எனது' பாடல்கள் கதையைப் பேசுவதோடு, ரசிக்கவும் வைக்கின்றன.
சேஸிங், த்ரில்லர், எமோஷன், ஆக்ஷன் என எல்லா தருணங்களையும், ஆழமாக்கியிருக்கிறது அவரின் பின்னணி இசை.
கதைக்கருவை எதார்த்த மீட்டரிலிருந்து விலகாமலும், பிரசார நெடியில்லாமலும் பேசுகின்றன வசனங்கள்.
எண்ணெய் வளம், கார்ப்பரேட் அரசியல், நாகர்ஜுனா பின்கதை எனத் தொடங்கும் திரைக்கதை, கச்சிதமான மேக்கிங்கால் பரபரப்போடு நகர்கிறது.
யாசகராக தனுஷ் திரைக்கதையில் நுழைந்த பின், அவரின் நடிப்போடு, அவர்களைத் தயார் செய்யும் காட்சிகளும் கைகொடுக்க, பரபரப்போடு சுவாரஸ்யமும் தொற்றிக்கொள்கிறது.
தனுஷின் காமெடிகளும், ராஷ்மிகாவின் அப்பாவித்தனமும் ஆங்காங்கே நகைச்சுவைக்கும் இடமளிக்கின்றன.
கார்ப்பரேட் உலகம், தனுஷின் யாசகர் உலகம் ஆகியவற்றோடு, நாகர்ஜுனாவின் குற்றவுணர்வால் தள்ளாடும் வாழ்வையும், சம அளவில் விவரிப்பது, திரைக்கதையை இன்னும் ஆழமாக்கியிருக்கிறது.

எமோஷன், பரபரப்பு என அதுவரை, எதார்த்தமாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்ந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் அதிலிருந்து விலகத் தொடங்குகிறது.
கதாநாயகனைத் துரத்தும் வில்லன் கும்பல், அவர்களிடமிருந்து தப்பித்துத் தப்பித்து ஓடும் தனுஷின் நிலை, இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் நாகர்ஜுனா - ராஷ்மிகா என இரண்டாம் பாதி திரைக்கதை பரபரப்பால் முதல் பாதியைக் கடக்கிறது.
ஆனால், அதன் பிறகு, தத்துவப் பாடல், டெம்ப்ளேட் ஆக்ஷன் அவதாரம், நியாயமான காட்சிகள் இல்லாமல் யூ-டேர்ன் அடிக்கும் கதாபாத்திரங்கள் போன்றவற்றோடு, நீண்டுகொண்டே போகும் அடுக்கடுக்கான காட்சிகள் சிறிது அயற்சியைத் தருகின்றன.

மேலும், அதுவரை எதார்த்தமாகவும், நியாயமான காட்சிகளோடும் பின்னப்பட்ட தனுஷின் கதாபாத்திரம், இறுதிக்காட்சி நெருங்க நெருங்க, 'லாஜிக் இல்லாத கதாநாயகன்' அவதாரத்தை எடுப்பது ஏமாற்றமே!
ஆங்காங்கே வரும் எமோஷன் மொமண்ட்களும், நடிகர்களின் உணர்வுபூர்வமான நடிப்பும் மட்டுமே அயற்சிப்பாதையின் களைப்பை ஓரளவிற்குச் சரி கட்டுகின்றன.
சில சறுக்கல்கள் எட்டிப்பார்த்தாலும், பரபரப்பிலும், எமோஷனிலும் தேவையான திரையனுபவ செல்வத்தைத் தந்திருக்கிறார் இந்த 'குபேரா'.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...