Operation Sindoor : `இந்தியாவின் 26 வருட பகை’ - குறிவைத்து தாக்கப்பட்ட மசூத் அசாரின் முகாம்!
ஆபரேஷன் சிந்தூர் வழி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. குறிப்பாக, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் இந்தத் தாக்குதலினால் உயிரிழந்திருப்பதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

மசூத் அசாரின் முகாமை குறிவைத்து இந்தியா தாக்கியதன் பின்னணி என்ன? அவருக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு என்ன?
புல்வாமா தீவிரவாத தாக்குதல், அவ்வளவு எளிதில் இந்தியர்களின் நெஞ்சிலிருந்து நீக்க இயலா துயரச்சம்பவம். பனி படர்ந்த காஷ்மீரின் அந்த சாலையில் நாட்டின் காவல் பணிக்காக விரைந்து கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்களின் கான்வாயை குறிவைத்து மனித வெடிகுண்டுடன் மோதிய காரினால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உடல் சிதறி பலியாகினர்.

ஒட்டு மொத்த நாடே அதிர்ச்சியில் உறைந்திருந்த நேரத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று வீடியோ வெளியிட்டது ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பு. அந்த கோரத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் தான். புல்வாமா தாக்குதல் மட்டுமல்ல அதற்கு முன்னரும் பல நாசக்கார வேலைகளுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார் மசூத்.
யார் இவர்?
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூரில் 1968 ம் ஆண்டு ஜீலை 10 ஆம் தேதி பள்ளி தலைமையாசிரியருக்கு மகனாக பிறந்தவர்தான் மவுலானா மசூத் அசார். படிப்பை முடித்த மசூத் ஒரு சில பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு ஹர்கத்-உல்-அன்சார், ஹர்கத்-உல்-முஜாக்கிதின் அமைப்புகளில் இணைந்து செயல்பட்டார்.

தீவிரவாத முகாம்களில் அளிக்கப்படும் பயிற்சிகளில் சரியாக செயல்பட முடியாததால் தீவிரவாத முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு சிலகாலம் ஆசிரியராக பணியாற்றிய மசூத் தீவிரவாதிகளின் ஆலோசகராக, இளைஞர்களை மூளைச்சலவை செய்பவராக மீண்டும் தீவிரவாத குழுவில் இணைந்தார்.

1994 ம் ஆண்டு காஷ்மீரில் தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த போது ஸ்ரீநகரில் வைத்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார் மசூத். சிறையில் அடைபட்டிருந்த காலத்தில் சில சமயங்களில் சிறையிலிருந்து தப்பிக்கவும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் எந்த முயற்சியும் கைகூடவில்லை சிறையிலேயே காலம் கழிக்க வேண்டியதாயிற்று.
உலகமே 21 ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்க குதூகலத்தோடு காத்திருந்த நேரத்தில் 1999 ம் ஆண்டு டிசம்பர் 24 ம் தேதி நேபாளத்திலின் காத்மண்டுவிலிருந்து டெல்லிக்கு கிளம்பிய விமானத்தை தீவிரவாதிகள் கைப்பற்றினர். தங்களின் கட்டுக்குள் வந்த விமானத்தை ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு கடத்தி சென்றனர் தீவிரவாதிகள்.
பயணிகளை பணயக்கைதியாக வைத்து இந்திய சிறையிலுள்ள மூன்று கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென நிபந்தனை விதித்தனர். இந்திய அதிகாரிகளுக்கு விஷயம் தெரிந்து பயணிகளை தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கும் பணியில் இறங்கினர். ஆனால் சிறு தவறு நேர்ந்தாலும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்ற காரணத்தால் அன்றைய பிரதமர் வாஜ்பாய் பொறுமை காத்தார்.

பயணிகளின் நன்மைகருதி கடத்தல்காரர்களின் நிபந்தனைப்படி மூன்று தீவிரவாதிகளையும் விடுவிப்பதாக அறிவித்தார் வாஜ்பாய். விடுவிக்கப்பட்ட மூன்று தீவிரவாதிகளில் மவுலானா மசூத் அசாரும் ஒருவர். இந்திய அரசாங்கத்தின் பிடியிலிருந்து வெளியே வந்த மசூத் ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பை தொடங்கி காஷ்மீரை இந்தியாவிடமிருந்து மீட்பதையே ஒரே நோக்கமாக கொண்டு நாசக்கார வேலைகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டார்.

உச்சபட்சமாக இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாக திகழும் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினார். 2008 ஆம் மும்பை தீவிரவாத தாக்குதலிலும் மூளையாக செயல்பட்டார். இடையில் ஒருமுறை பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு உரிய ஆதாரங்கள் இல்லாமையால் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, பதன்கோட் விமானப்படை தள தாக்குதல், உரி தாக்குதல் ,புல்வாமா தாக்குதல் என மசூத் அசாரின் தீவிரவாத தாக்குதல்கள் நீள்கிறது.
சர்வதேச தீவிரவாதி
பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு சீனாவின் முட்டுக்கட்டையையெல்லாம் மீறி ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வைத்தது இந்தியா.
அந்த மசூத் அசாரின் முகாமைத்தான் இந்திய இராணுவம் தாக்கியதில் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.