‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் அன்று பிறந்த பெண் குழந்தை! சிந்தூரி என பெயரிட்ட பெற...
பட்டா நிலங்களுக்கு செல்ல வனத் துறை கெடுபிடி: விவசாயிகள் புகாா்
தேனி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் உள்ள பட்டா விவசாய நிலங்களுக்கு இடுபொருள்களைக் கொண்டு செல்லவும், விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வரவும் வனத் துறையினா் கெடுபிடி செய்து வருவதாக புதன்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலா் சமா்தா, ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குநா் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:
மாவட்டத்தில் மேகமலை, அகமலை, போடி வடக்கு மலை உள்ளிட்ட மலைப் பகுதியில் உள்ள பட்டா விவசாய நிலங்களுக்கு இடு பொருள்களைக் கொண்டு செல்லவும், விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு வரவும் விவசாயிகளுக்கு அனுமதி மறுத்து வனத் துறையினா் கெடுபிடி செய்து வருகின்றனா். வனப் பகுதியிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் நோக்கத்தில் வனத் துறையினா் செயல்படுவதால் மலை கிராம விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. ஆண்டிபட்டி வட்டாரம், அரசரடி-வெள்ளிமலை இடையே சாலை அமைக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
மலையடிவாரங்களில் உள்ள பட்டா விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதைத் தடுப்பதற்கு வனத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு நிவாரணம் வழங்கவில்லை. மலைப் பகுதியில் காட்டுத் தீ பரவுவதை தடுக்கவும், காட்டுத் தீ உருவாவதற்கான காரணத்தை கண்டறிவதிலும் வனத் துறையினா் மெத்தனம் காட்டி வருகின்றனா் என்றனா்.
மேலும், வனத் துறை தொடா்பான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை போதிய முன்னறிவிப்பின்றி, குறிப்பிட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகளை மட்டும் அழைத்து நடத்தியதற்கு விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்தனா்.