காஸாவில் ரியல் ஸ்குவிட் கேம்! உணவுக்காக உயிரிழக்கும் மக்கள்!
`StartUp' சாகசம் 29: `உணவு, மருந்து... 40+ கி.மீ வரை டெலிவரி’ - எப்படி செய்கிறது ரூட் டெலிவரி?
கோவிட் 19 பெருந்தொற்றுக்கு பின்னான நமது வாழ்க்கை முறைகள் வெகுவாக மாறிவிட்டன. அதிலும் குறிப்பாக, நமது உணவுப் பழக்கத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு பட்டனைத் தட்டினால், விரும்பிய உணவு வீட்டின் வாசலுக்கு வந்து சேரும் அதிசயம், இன்று ஓர் அத்தியாவசியமாக மாறிவிட்டது. இரண்டு பெருநிறுவனங்கள், சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளன. இதைப் பார்க்கும் பலருக்கும், "இந்தத் துறையில் இனி புதிதாக நுழைய வாய்ப்பே இல்லையா?" என்ற கேள்வி எழலாம். ஆனால், உண்மை அதுவல்ல. இந்தப் பிரம்மாண்டமான சந்தையில், இன்னும் நிரப்பப்படாத வெற்றிடங்களும், புதிய தொழில் வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன.
இன்று, பெருநகரங்களில் வாழும் ஒரு நடுத்தர வர்க்க இந்தியரின் திறன்பேசியில் (Smartphone) நிச்சயம் இந்தியாவின் இரு பெரும் நிறுவனங்களின் செயலி இருக்கும். பசி எடுக்கும்போது, உணவகத்திற்குச் செல்லாமல், விரல் நுனியில் விரும்பிய உணவை ஆர்டர் செய்யும் பழக்கம், இன்று ஒரு ஆடம்பரமல்ல, அத்தியாவசியமாகியுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்தத் துறையின் வளர்ச்சி விண்ணை முட்டும் வேகத்தில் உள்ளது.

இந்திய விநியோகச் சந்தை என்பது இன்று இரண்டு பெரும் ஜாம்பவான்களால் ஆளப்படுகிறது. இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து சந்தையின் 90%-க்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன. இவர்களைத் தவிர, சில பிராந்திய அளவிலான சிறிய நிறுவனங்கள் இருந்தாலும், தேசிய அளவிலான போட்டி என்பது இந்த இருவரைச் சுற்றியே சுழல்கிறது.
ஆரம்பத்தில் உணவு விநியோகம் மட்டுமே செய்து வந்த இந்த நிறுவனங்கள், இன்று மளிகைப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைச் சில நிமிடங்களில் விநியோகம் செய்யும் 'க்விக் காமர்ஸ்' (Quick Commerce) துறையிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த உணவக மற்றும் உணவுச் சேவைத் துறை குறித்த சந்தை ஆராய்ச்சி அறிக்கைகளின்படி, இந்தியாவின் மொத்த உணவுச் சேவை சந்தையின் மதிப்பு சுமார் ₹5.3 லட்சம் கோடி முதல் ₹5.7 லட்சம் கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே உணவு விநியோக நிறுவனங்களுக்கான பிரம்மாண்டமான வேட்டைக்களம். மேலும், ஆண்டுக்கு 10% வளர்ச்சி விகிதத்தில், 2030-ல் இது 11 லட்சம் கோடி என்ற புதிய சந்தை மதிப்பை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு விநியோகம் - புதிய பரிணாமம்!
உணவு விநியோகம் என்ற சந்தை தற்போது புதிய பரிணாமத்தைப் பெற்று வருகிறது.
உணவைத் தாண்டிய வளர்ச்சி (Beyond Food Delivery): 'க்விக் காமர்ஸ்' எனப்படும் அதிவேக வர்த்தகம் அடுத்த பெரிய புரட்சியாகும். மளிகைப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், மருந்துகள், செல்லப் பிராணிகளுக்கான உணவு போன்றவற்றை 15-30 நிமிடங்களில் விநியோகம் செய்வது மிகப்பெரிய சந்தையை உருவாக்கும்.
கிளவுட் கிச்சன் (Cloud Kitchen) புரட்சி: வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட இடமில்லாத, விநியோகத்திற்காக மட்டுமே செயல்படும் சமையலறைகள் 'கிளவுட் கிச்சன்கள்' எனப்படுகின்றன. இவை உணவகங்களுக்கான செலவைக் குறைப்பதால், விநியோகக் கட்டமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது இரு தரப்புக்கும் லாபகரமானது. இப்போதே இதன் சந்தை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல விதமான பரிணாமங்கள் இந்தச் சந்தையில் புதிதுபுதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

மொத்தத்தில், இந்திய உணவு விநியோகச் சந்தை என்பது வெறும் உணவு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இது தொழில்நுட்பம், விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர் வசதி ஆகிய மூன்றையும் இணைக்கும் ஒரு மாபெரும் கட்டமைப்பு. இந்தச் சந்தையின் வளர்ச்சி இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது. இப்போதிருக்கும் சவால்களைச் சாதுர்யமாகக் கையாளும் நிறுவனங்களே, இந்தியாவின் மிகப்பெரிய மதிப்பிலான இந்தச் சந்தையின் அடுத்தகட்ட வெற்றியாளர்களாக வலம் வருவார்கள்.
சமீபத்தில் வாகனச் சேவையில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனம், உணவு விநியோகத்திற்காகச் சுமார் 150 கோடி ரூபாய் திரட்டியது. ஆனால், அடுத்த சில நாட்களுக்குள் ஒரு மாநிலத்தில் அதன் சேவைகள் தடை செய்யப்பட்டன. இதில் இரு பெரும் நிறுவனங்களின் ஆதிக்கம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், இந்தச் சந்தை மிகப்பெரும் வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளது.
'ரூட் டெலிவரி'
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் தனக்கென ஒரு விநியோகச் சந்தையை உருவாக்கி, 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்குச் சென்னை முழுவதும் விநியோகம் செய்து வருகிறது. அதுமட்டுமல்ல, 'நீங்கள் வீட்டில் சமைத்து ஆர்டர் எடுத்தால் போதும், நாங்கள் சென்னை முழுவதும் விநியோகம் செய்கிறோம்' என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளதால், பல சிறு தொழில்முனைவோர் கூட தங்கள் சேவைகளைச் சென்னையில் விரிவுபடுத்தி வருகின்றனர். இதைக் கேட்டால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், சென்னையைச் சேர்ந்த 'ரூட் டெலிவரி' என்ற நிறுவனம், சென்னையில் 30 கிலோமீட்டர் வரை உணவு, மருந்துகளை விநியோகம் செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் சாகசக் கதையைத்தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம்.
'ரூட் டெலிவரி' நிறுவனத்தின் நிறுவனர் திரு. செந்தில் அவர்களிடம், அந்நிறுவனத்தின் சாகசப் பயணம் குறித்துக் கேட்போம்.

``ரூட் டெலிவரி துவங்க என்ன காரணம்? எது உங்களை விநியோகம் தொடர்பான நிறுவனம் ஆரம்பிக்க உந்துதலாக இருந்த்தது?"
``நான் பல நிறுவன நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறேன். நிர்வாக தொடர்பான கொள்முதல் துறையில் பணியாற்றி, கடைசியாக ஒரு விநியோக தொழில் தொடக்க நிறுவனத்தில் நான் வேலை பார்த்தேன். அவ்வாறு செய்துகொண்டிருக்கும்போது அந்த நிறுவனம் நிதி நெருக்கடியால் மூடப்படும் நிலைக்கு வந்தது.
அதன்பின்னர் நாம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, என் மனதில் தோன்றியது - நாம் இங்கு விநியோகம் தான் பார்த்துக் கொண்டிருந்தோம். நாம் ஏன் இந்த விநியோக நிறுவனத்தையே தொடங்கக் கூடாது என்று சொல்லித்தான் நான் இதை ஆரம்பித்தேன்.
முதலில் மின்வணிக பின்னணியில் தான் மின்வணிக விநியோகத்தை நானே விநியோகம் செய்ய ஆரம்பித்தேன். விநியோகம் செய்து அதில் என்னென்ன நல்ல விசயங்கள், குறைபாடுகள் இருக்கின்றன என்று பார்த்து கற்றேன், ஏனென்றால் ஒரு தொழிலை ஆரம்பிக்கும் முன்பே அதில் அறிவு இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
அதன்படி செய்ய ஆரம்பிக்கும்போது இந்த விநியோகத்தில் நிறைய பேருக்கு நிறைய தேவைகள் இருக்கின்றன. இந்த விநியோக தேவையை நிறைவேற்றுவதால் நிறைய வேலை வாய்ப்புகளை நம்மால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் நான் இந்த விநியோக நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
ரூட் டெலிவரி நிறுவனத்தை ஆரம்பித்த சில நாட்களிலேயே கொரோனா வைரஸ் நோய் தொடங்கியது. கொரோனா பலரை பாதித்தது. ஆனால் எனக்கு அந்த கொரோனா பல நல்ல வழிகளைக் காட்டியது. காரணம் என்னவென்றால் அந்த நேரத்தில் விநியோகத்திற்கு நிறைய தேவை இருக்கிறது என்பது இந்த கொரோனா மூலமாக தெரிய வந்தது.
நாங்கள் உணவு மற்றும் மருந்து விநியோகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம். ஏனென்றால் நிறைய பேர் கொரோனா பாதிப்பால் தனிமையில் இருந்தார்கள். அவர்கள் தனிமையில் இருந்தபோது நாங்கள் உணவு விநியோகத்தை அவர்களுடைய வீட்டிற்கே கொண்டு போய் கொடுத்தோம். மருந்துகள் விநியோகம் செய்ய ஆரம்பித்தோம்.
பல பேர் எங்களிடம் " நாங்கள் வெளியே போக முடியவில்லை, இருந்தாலும் எங்களுக்காக உணவு கொண்டு வந்து கொடுத்திருக்கிறீர்கள்" என்று சொன்னார்கள். அந்த நேரத்தில் இதர போட்டி நிறுவனங்கள் இந்த உணவகங்கள் திறக்காத்தால் விநியோகம் செய்ய இயலவில்லை , கிளவுட் கிச்சன்களிலிருந்து உணவுகளைப் பெற்று 25, 30 கி.மீட்டர் வரை விநியோகம் செய்கிறீர்கள். மற்ற நிறுவனங்கள் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் தான் விநியோகம் செய்கிறார்கள். நீங்கள் 25-30 கிலோமீட்டர் தாண்டி வந்து எங்களுக்கு உணவு விநியோகம் செய்து கொடுக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி என்றனர்’’ இது எனக்கு மிகப் பெரிய ஆத்ம திருப்தியைக் கொடுத்தது.
இந்த ஆத்ம திருப்தியைத் தான் பெரிய அளவில் நாம் இந்த விநியோக நிறுவனத்தைக் கொண்டு போக வேண்டும் என்ற ஒரு உத்வேகத்தையும் எனக்குக் கொடுத்தது. அதனால்தான் ஒற்றையாளாக ஆரம்பித்த ரூட் டெலிவரி நிறுவனம் இப்போது 55+ பணியாற்றும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது."

``Chennai-யில் hyper-local delivery சேவையில் ROOT எப்படி தனித்துவம் பெற்றுள்ளது?"
``சென்னையில் இருக்கிற அதிதீவிர உள்ளூர் விநியோக நிறுவனங்களை விட ரூட் என்ன தனித்துவமாக இருக்கிறது என்றால், எங்களின் கவனம் சில வேறுபாடுகளை கொண்டது. அப்படி என்றால் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிலேயே தான் விநியோகம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் ஒரு 35-லிருந்து 40 கிலோமீட்டர் வரை விநியோகம் செய்து கொண்டிருக்கிறோம்.
இதனால் என்ன சிறப்பு என்றால், கடைக்காரருடைய பொருளை அவர்கள் எங்கே விநியோகம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்களோ அங்கு வரை எங்களால் கொண்டு போய் சேர்க்க முடியும். உதாரணமாக ஒரு கடை பெருங்குடியில் இருக்கிறது, அவர்களுடைய உணவு நல்லாக சுவையாக இருக்கிறது, ஆனால் வாடிக்கையாளர் ஆவடியில் இருக்கிறார்கள் என்றும் போது அவர்களுக்கு விநியோகம் தடைப்படும் என்று யோசிக்கிறார்கள். ஆனால் அந்த விநியோக தடையில் தான் ரூட் வந்து தீர்வு செய்கிறது. எனவே இதனால் அவர்களுடைய தொழிலும் அந்த அளவிற்கு விரிவாக்கம் செய்ய முடியும்.
சிறு சிறு தொழில் வைத்திருப்பவர்கள்கூட, இந்த மாதிரி என்னுடைய பொருள் நான் சென்னை முழுவதும் விநியோகம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்கு சிறந்த ஒரு நிறுவனம் ரூட். இது தான் மற்ற நிறுவனங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள ஒரு தனித்துவம்."
Amazon, Flipkart, swiggy, zomoto போன்ற பெரிய நிறுவனங்கள் வழங்காத சேவைகளில் நீங்கள் செய்யும் சேவைகள் என்னென்ன?
``அமேசான், பிளிப்கார்ட் இவர்களால் வழங்க முடியாத சேவையை நாங்கள் இரண்டு வகையில் வழங்குகிறோம்.
முதலாவது, உங்களுடைய பொருள் சென்னையில் எல்லா இடங்களிலும் சென்றடைய வேண்டும் என்றால் எங்களை அணுகலாம்.
இரண்டாவது, விநியோகம் செய்வர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற நேரத்திற்கு எங்களால் வேலையை செய்து கொடுக்க முடியும். சில பேர் "என்னால் இரண்டு மணி நேரம் தான் வேலை செய்ய முடியும்" என்றால், அதற்கும் பகுதி நேர விநியோகம் நாங்கள் கொடுக்கிறோம். சில பேர் வயதானவர்களுக்கு "எனக்கு ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே கொடுங்கள்" என்றாலும் அதற்கும் நாங்கள் வேலை கொடுக்கிறோம்.
"எனக்கு எட்டு மணி நேரமும் வேலை வேண்டும், எனக்கு இவ்வளவு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வேண்டும் . எனக்கு ஆர்டர் அடிப்படையில் வேண்டாம். நான் இலக்கு வைத்து ஓட விரும்பவில்லை. எனக்கு இந்த இவ்வளவு ஆர்டர் செய்தால் தான் இவ்வளவு பணம், அந்த மாதிரி ஊக்கத்தொகை, அந்த மாதிரி இலக்கு வைத்து வேண்டாம் . எனக்கு பொதுவாக எல்லா நிறுவனங்களிலும் கிடைக்கும் மாதிரி மாதம் சம்பளம் கிடைத்தால் போதும்" என்று நினைக்கும் ஒவ்வொரு விநியோகிப்பாளருக்கும் வழியில் அந்த சேவையை வழங்கியிருக்கிறோம்.
இது பிற இடங்களில் எங்கும் கொடுக்கவில்லை. எல்லாரும் விநியோகிப்பாளர்களை ஒரு இயந்திரம் போல தான் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் விரைவாக எடுத்துப் போய் விநியோகம் செய்யுங்கள், அப்போது தான் உனக்கு ஊக்கத்தொகை, வேகமாக போ என்று நாங்கள் சொல்வதில்லை.
எங்களுக்கு நாளை விநியோகம் செய்யவேண்டிய விபரம் இன்று மாலையே வந்துவிடும். அதைப்பொறுத்து எங்கள் விநியோகம் செய்பவர்களுக்கு பணிகளை தெரிவித்துவிடுவோம்.
நாங்கள் எங்கள் விநியோகஸ்தர்கள் உட்கார இடம், தண்ணீர் என அடிப்படை வசதிகளை முறையாகக் கொடுக்கிறோம். என்னுடைய வாடிக்கையாளர்கள் பொருட்களை விநியோகம் செய்யப்போகும்போது உணவே கொடுக்கிறார்கள்.
அந்தந்த விநியோகஸ்தர்கள் காலையிலேயே வருபவர்கள் என்றால் காலை உணவு இலவசமாக கொடுக்கிறார்கள். மதிய உணவு நேரம் வந்தால் மதிய உணவு இலவசமாக கொடுக்கிறார்கள். இந்த மாதிரி மற்ற நிறுவனங்களில் யாரும் செய்வதில்லை. இதுவும் ரூட் நிறுவனத்தின் மிகப்பெரிய பணி. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களையும், விநியோகஸ்தர்களையும் இரு கண்ணெனக் கருதி பணியாற்றிவருகின்றோம்.

``உணவு, மருந்து, மாமிசம், மற்றும் groceries போன்ற பல்வேறு பொருட்களை டெலிவரி செய்வதில் என்னென்ன சிரமங்கள் உள்ளன?”
``எல்லா விநியோகத்திலுமே சிரமங்கள் இருக்கின்றன,. முக்கியமான சிக்கல்கள் என்றால், மழை காலம். மழை காலத்தில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. ஆனால் மற்ற போட்டியாளர்கள் அந்த மழை நேரத்திற்காக கட்டணம் ஏற்றிவிடுவார்கள். அல்லது உணவு ஆர்டர் செய்தீர்கள் என்றால் ஓட்டுநர்கள் கிடைக்க மாட்டார்கள்.
ரூட் டெலிவிரியில் என்னவென்றால், எங்கள் வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்கு உணவை பதிவு செய்துவிட்டால் 30 நாட்களில் அதிக வெயிலோ அதிக மழையோ என்னவாக இருந்தாலும் நாங்கள் உணவை விநியோகம் செய்திருக்கிறோம். பாதுகாப்பான முறையால் விநியோகஸ்தரும், பாதுகாப்பான முறையில் உணவும் சரியான நேரத்திற்கு சென்று சேர்த்திருக்கிறோம்.
எங்களுடைய பெரும்பான்மையான சேவைகள்:
- வயதானவர்களுக்கு உணவு கொடுக்கிறோம்
- வயதானவர்களுக்கு மருந்துகள் கொடுக்கிறோம்
- மளிகைக்கடை சாமான்கள் கொடுக்கிறோம்
- பள்ளிக்கு போகும் குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்கிறோம்
இவை எல்லாமே அவர்கள் எங்களுக்காக காத்திருப்பார்கள் . மழை பெய்கிறது எங்களால் வர முடியாது என்றோ, வெயில் கொளுத்துகிறது என்றோ நாங்கள் இருக்கமாட்டோம், நேரதத்ற்கு விநியோகம் செய்ய முயலுவோம். இந்த சிரமங்கள் எல்லாம் பார்த்தால் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாது.
சில பேர் சரியான நேரத்திற்கு ஒரு வேளை சாப்பிட முடியாது. சிலருக்கு மாத்திரைவேண்டும் அதெல்லாம் சரியான நேரத்தில் விநியோகம் செய்யும்போது, அபார்ட்மென்ட் வீடு வாசலில் நின்றுக் கொண்டு "உணவு எடுத்துக் கொள்ளுங்கள், பாதுகாவலர் வந்து எடுத்துக் கொள்ளுங்கள்" என்று எல்லாம் அழைப்பது கிடையாது. வீட்டு வாசலுக்குச் சென்று கதவைத் தட்டி கையில் கொடுத்துவிட்டுத் தான் வருவார்கள்.
இந்த சேவைதான் எங்களுக்கு நல்ல மதிப்பைக் கொடுக்கிறது. எங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தியும் கொடுக்கிறது. மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.”
``ரூட் டெலிவரி ஆரம்பித்தபின் நீங்கள் சந்த்தித்த சவால்கள் என்ன? அதற்கு எப்படி தீர்வுகள் கண்டீர்கள்?”
``நிதி தான் பெரும் சிக்கல். எல்லாருக்கும் சம்பளமும் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்துதான் சம்பளம் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கொஞ்சம் தாமதப்படுத்தினாலும் சம்பளம் கொடுப்பதிலும் பல சிக்கல்கள் ஆயின. குடும்பத்தையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் திறம்பட சமாளித்து நிறுவனம் இப்போது நல்ல நிலையில் நடக்கிறது என்பதுதான்.”
உங்கள் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் விரிவாக்கம் குறித்து சொல்லுங்கள்?
``2019 ல ஒரே ஒரு கிளையன்ட் வச்சு பண்ண நாங்க பிறகு ரெண்டு டெலிவரி பாய்சோட ஆரம்பிச்ச நிறுவனம் இப்போ 30+ நிறுவனங்களுடன் சென்னை மற்றும் கோயம்புத்தூர் விநியோகம் செய்துட்டே இருக்கோம், இப்போது விநியோகஸ்தர்கள் 55+ இருக்கிறார்கள்.
1. சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான ஆதரவு:
எந்தவொரு சிறு அல்லது குறு நிறுவனமும் விநியோக (டெலிவரி) சேவைகளில் உள்ள சிக்கல்களால் முடங்கிவிடக் கூடாது என்பதே எங்கள் முதன்மை நோக்கம். தங்களால் விநியோகம் செய்ய இயலவில்லை என்ற காரணத்திற்காக, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விற்பனையை ஒரு குறிப்பிட்ட ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் சுருக்கிக் கொள்ளக்கூடாது. அதை இன்னமும் விரிவாக்கவேண்டுமென்றால் ரூட் நிறுவனம் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்
ஒரு தொழில்முனைவோர், தனது தயாரிப்பை சென்னை முழுவதும் கொண்டு சேர்க்க விரும்பினால், அதற்கான முழுமையான தீர்வை நாங்கள் வழங்குகிறோம். விநியோகப் பிரச்னைகளால் எந்த நிறுவனமும் மூடப்படக் கூடாது என்பதும் எங்கள் இலக்கு.

2. இல்லத்தரசிகளுக்கு பணியளித்தல்:
தற்போதைய சூழலில், கணவன் மற்றும் மனைவி இருவரும் பணிக்குச் சென்றால் மட்டுமே குடும்பத்தை நிர்வகிக்க முடிகிறது. ஆனால், பல இல்லத்தரசிகளால் தினமும் எட்டு முதல் ஒன்பது மணி நேரம் முழுநேர வேலைக்குச் செல்ல முடிவதில்லை.
அவர்கள் பொதுவாக காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தங்களுக்கு ஓய்வு நேரம். ஏனெனில், காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மதியம் அவர்களை மீண்டும் அழைத்து வருவது, வீட்டு வேலைகளைக் கவனிப்பது போன்ற பொறுப்புகள் அவர்களுக்கு உள்ளன.
இவ்வாறு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் வேலை செய்ய விரும்பும் இல்லத்தரசிகளுக்கு, பாதுகாப்பான மற்றும் நம்பகமான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கும் திட்டமும் இருக்கிறது.
எங்களின் இந்த சேவை சென்னைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் நிலை (Tier-2, Tier-3, Tier-4) நகரங்களில் உள்ள பெண்களுக்கும் இந்த வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அவர்கள் எந்தவிதமான அழுத்தமும் இன்றி, உணவகங்களின் வாசலில் காத்திருக்காமலும், விற்பனை இலக்குகளுக்காக (Target) ஓடாமலும் பாதுகாப்பாகப் பணிபுரியும் சூழலை ஏற்படுத்துவதே எங்கள் குறிக்கோள்.
எங்களின் அடுத்த ஐந்தாண்டு இலக்கு, எங்கள் விநியோகச் சேவையை குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு மாநிலங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பதாகும்.
இந்த நோக்கத்துடன்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அதற்காகவே தகுந்த முதலீட்டாளர்களைத் (Investors) தேடிக்கொண்டிருக்கிறோம். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், எங்களைப் போல் புதிதாகத் தொடங்கி வளர விரும்பும் தொழில்முனைவோருக்கும் ஆதரவளிக்க வேண்டும்.”