யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர்...
லண்டனில் MBA; கிராமத்தில் பேரீச்சை விவசாயம்... வருடம் ரூ.40 லட்சம் ஈட்டும் பட்டதாரி செல்வது என்ன?
மகாராஷ்டிராவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் லண்டன் சென்று எம்.பி.ஏ. முடித்துவிட்டு இப்போது விவசாயம் செய்து வருகிறார். ஜால்னா அருகில் உள்ள பார்த்கேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் குகே என்பவர் லண்டன் சென்று எம்.பி.ஏ. முடித்தார்.
லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ரமேஷ் பன்னாட்டு கம்பெனிகளில் வேலை தேடி அலையவில்லை. தனது தந்தை செய்து கொண்டிருந்த விவசாயத்தைத் தானும் நவீன முறையில் செய்ய முடிவு செய்தார்.
அதேசமயம் வித்தியாசமாகச் செய்ய முடிவு செய்தார். இதற்காக யாரும் செய்யாத பேரீச்சை விவசாயத்தைக் கையில் எடுத்தார். இதில் சாதித்தது குறித்து ரமேஷ் கூறுகையில், ''குஜராத்திலிருந்து பேரீச்சை கன்றுகளைத் தலா 4000 ரூபாய் என்ற அளவில் 400 கன்றுகளை வாங்கினேன். அவற்றை எங்களுக்குச் சொந்தமான 4 ஏக்கரில் 25க்கு 25 என்ற இடைவெளியில் நடவு செய்தேன்.

மூன்று ஆண்டுகள் இயற்கை முறையில் அக்கன்றுகளை வளர்த்தோம். இடைப்பட்ட காலத்தில் இடைவெளியில் சோயாபீன்ஸ் ஊடுபயிராகப் பயிரிட்டோம்.
நான்காவது ஆண்டிலிருந்து பேரீச்சை காய்க்கத் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு ஒவ்வொரு மரமும் 50 கிலோ வரை காய்த்து இருக்கிறது. அவற்றைக் கிலோ 150 முதல் 200 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்பனை செய்கிறேன்.
400 மரத்திலிருந்து 30 டன் பேரீச்சை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் எங்களுக்கு ரூ.35 முதல் 40 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். எனவே இன்றைய இளைஞர்கள் அதிக அளவில் விவசாயத்திற்கு வரவேண்டும்.
விவசாயத்தைத் தொழிலாகக் கருதி அதில் இளைஞர்கள் புதுமையைப் புகுத்து முயற்சி செய்து பார்க்க வேண்டும். எனது தோட்டத்தில் விளையும் பேரீச்சையை மும்பைக்கும், உலர்ந்த பழங்களை வளைகுடா நாடுகளுக்கும் அனுப்பத் திட்டமிட்டு இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
வழக்கமாக பேரீச்சை வளைகுடா நாடுகளில் மட்டும் விளையும். ஆனால் இந்தியாவிலும் சிலர் அதனைப் பயிரிட்டுள்ளனர்.