'பால் ஏ.டி.எம்... தினமும் ரூ.7,000 வருமானம்' - மாத்தி யோசித்த மகாராஷ்டிரா விவசாயி!
'ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுத்திருப்போம்... பால் வாங்கினால் எப்படி இருக்கும்?' - இதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு விவசாயி.
மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் கோல்பே. இவர் அடிப்படையில் ஒரு விவசாயி.
இவர் தனது 24 ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு, சோயா பீன்ஸ், பருத்தி ஆகியவற்றைப் பயிர் செய்து வந்திருக்கிறார். ஆனால், அறுவடை அவ்வளவாக இல்லை. இது எதனால் என்று பார்க்கும்போது, வயல் மண்ணில் ஆர்கானிக் கார்பன் குறைவாக உள்ளது. இதை சரிசெய்ய பசுவின் சாணம் வயலுக்கு போட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

முதலில், பசு சாணத்தை வெளியில் இருந்து வாங்கியிருக்கிறார். இதற்கு கிட்டத்தட்ட 2.5 லட்ச ரூபாய் ஆகியிருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையைத் தொடர்ந்து கொடுக்க முடியுமா என்கிற சந்தேகம் அவருக்கு எழுந்துள்ளது.
உடனே, 'மாடு வாங்கிவிடலாம்' என்று ரூட்டை மாற்றியிருக்கிறார். வங்கிகள் கடன் தர மறுத்திருக்கின்றனர். இதனால், தன் மனைவியின் நகையை அடகு வைத்தும், தனது சேமிப்பைப் போட்டும் 13.5 லட்சம் ரூபாய் செலவில் ஹிஸார் மற்றும் ஹரியானாவில் இருந்து 16 முர்ரா எருமைகளை வாங்கியிருக்கிறார்.
ஒவ்வொரு எருமைகளும் தினமும் 10–12 லிட்டர் பால் கொடுக்கும் திறன் உடையது. இந்தப் பாலை ஆரம்பத்தில் தனியார் பால் சேகரிப்பு மையங்களுக்கு விற்பனை செய்திருக்கிறார். சின்ன சின்ன பிரச்னைகளுக்காக பாலை வாங்காமல் இருப்பது, தாமதாமாகப் பேமென்ட் செய்வது போன்றவை இவருக்கு பெரிய பிரச்னையாக இருந்துள்ளது.
பால் விற்பனையில் புதிய முயற்சி
இதனால், தானே பால் விற்பனை செய்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். உடனே சி.சி.டி.வி மற்றும் குளிரூட்டும் வசதிகளுடன் ரூ.5.5 லட்ச மதிப்பில் நவீன மற்றும் சுகாதாரமான கொட்டகையை அமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து பராமரித்தும் வருகிறார்.
அடுத்ததாக, மாடுகளுக்கு மக்காச்சோளம், சூப்பர் நேப்பியர் போன்ற அதிக பால் தரும் தீவனங்கள் மற்றும் தாதுப்பொருட்களை உணவாக வழங்கி இருக்கிறார். இந்த ஏற்பாடுகளால் மாதம் பால் விற்பனை மூலம் ரூ.75,000 வருமானம் பெறுகிறார் மற்றும் 70 - 80 ட்ராலி சாணம் அவரது வயலுக்கு கிடைக்கிறது.

இப்போது அவரிடம் 19 எருமைகள் உள்ளன. ஒரு லிட்டர் பாலை ரூ.70-க்கு விற்பனை செய்கிறார். தினமும் 100 - 120 லிட்டர் எருமை பால் விற்கிறார். இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.7,000 இவரது வருமானம். இதில் பாதி கூலிக்கும், தீவனத்திற்கும் சென்றுவிடுகிறது.
அடுத்ததாக, தான் புனே மற்றும் நாசிக்கில் பார்த்த பால் ஏ.டி.எம்மில் தனது ஊருக்கு கொண்டு வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறார். அதன் விளைவு, அந்த பால் ஏ.டி.எம்மை ரூ.2.5 லட்சம் முதலீட்டில் வாங்கிவிட்டார்.
இந்த ஏ.டி.எம்மில் இருந்து ஸ்மார்ட் கார்டு, கியூ.ஆர் கோடு, பணம் போன்ற ஆப்ஷன்கள் மூலம் பால் வாங்கிக்கொள்ளலாம். இதில் பால் வாங்க வாடிக்கையாளர்களே பாத்திரங்களை கொண்டு வந்துவிடுகிறார்கள்.
இப்போது, ஒரு நாளைக்கு சுமார் 200 - 250 வாடிக்கையாளர்கள் தினமும் பால் ஏ.டி.எம்மில் இருந்து பால் வாங்கி செல்கின்றனர். ஆக, பால் ஏ.டி.எம், டெலிவரி என ஒரு நாளைக்கு 350 லிட்டர் வரை விற்கிறார். பாலைத் தாண்டி பனீர், தயிர் போன்ற மதிப்புக்கூட்டல் பொருட்களையும் விற்று வருகிறார். ஏ.டி.எம் அருகிலேயே, சின்ன ஐஸ் கிரீம் பார்லரும் தொடங்கி உள்ளார்.
அடுத்து, எனது பால் பண்ணையை விரிவுப்படுத்தி தினமும் 1,000 லிட்டர் பால் விற்பனையை செய்வது தான் இவரது இலக்கு என்று கூறியிருக்கிறார் கோல்பே!
ஒரு பிரச்னை வரும்போது, அதற்கான சரியான தீர்வை கண்டுபிடித்துவிட்டாலே, வெற்றி பெற்றுவிடலாம்!