யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர்...
திமுகவில் புகைச்சல்; தமிழ்நாட்டை அமித் ஷா பார்த்துக்கொள்வார்! - நயினார் நாகேந்திரன்
திமுகவில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும்? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அழகர் நகர் பகுதியில் உள்ள பூங்காவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் யோகா செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன்,
"முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இ-பாஸ் நடைமுறையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழக அரசிடம் நீதி கிடைக்கவில்லை, நீதிமன்றம் மூலம் எங்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது.
மேலும், முருக மாநாடு மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இதில் கட்சிப் பேதமின்றி முருக பக்தர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.
கீழடி அறிக்கை விவகாரத்தில், மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களைத்தான் மாநில அரசு 'ஸ்டிக்கர்' ஒட்டி செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் சிலர் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பதாகவும் தமிழைத் தவிர இவர்களுக்கு வேறு ஏதும் தெரியாது என்றும் கடுமையாக விமர்சித்தார்.
"தமிழ் உலகத்திலேயே சிறந்த மொழி. கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த குடி. தமிழை வைத்து இன்னும் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
திருக்குறளை 63 மொழிகளில் மத்திய அரசுதான் மொழிபெயர்த்தது. ஐநாவில் மோடி தமிழைப் பற்றி பேசியிருக்கிறார். அண்டை மாநிலங்களுக்குச் சென்றாலும் மோடி தமிழைப் பற்றி பேசுகிறார்" என்றார்.
மேலும், ஆளும் திமுகவின் ஐந்து ஆண்டு காலம் முடியப்போகும் நிலையில், 2,500 முகாமில் இருந்து 12 லட்சம் மனுக்கள் வந்ததாகவும், எல்லாம் தீர்வு கண்டதாகவும் கூறுகின்றனர்.
மத்திய அரசு திருநெல்வேலி மாநகராட்சிக்கு 900 கோடி கொடுத்தது. அதற்குச் சான்று இந்த பூங்காவைப் பாருங்கள் என்றார்.
திமுக கூட்டணியில் புகைச்சல் நிலவுகிறதா என்ற கேள்விக்கு, புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும்? எனக் கிண்டலாகப் பதிலளித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து, "கூட்டணியில் சீட்டைப் பற்றி கவலை இல்லை, கூட்டணியில் தொடர்வோம் எனத் திருமாவளவன் கூறுகிறார். இப்போது ஐந்து சீட்டு வாங்கி இருக்கிறார்கள், வரும் தேர்தலில் இரண்டு சீட்டு வாங்கிவிட்டு தொடர்வார்களா? இந்தக் கேள்வி அவரிடம் கேட்க வேண்டும்" என்று கூறினார்.
பாஜக கூட்டணிக்கு வேறு யாரும் வர வாய்ப்புள்ளதா, பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு,
"பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் 10 மாத கால அவகாசம் இருக்கிறது. வலுவான கூட்டணியாக இருப்பதால்தான் தொடர்ந்து எங்களிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். வலுவில்லாத கூட்டணியிடம் கேட்கவே மாட்டீர்கள்" என்று பதிலளித்தார்.
4 ஆண்டு சாதனைகள் குறித்து மக்களிடம் பேசாமல், எதிர்க்கட்சி பற்றியும் கூட்டணி பற்றியும் பேசி, புலி வருது, புலி வருது எல்லாரும் எங்கள் மீது வந்து படுத்துக்கொள்ளுங்கள் என்பது போல் திமுகவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் தமிழகம் வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு,
"பிரதமருக்கு நிறைய வேலை இருக்கிறது. பிரதமர் வரும் அளவிற்கு தமிழகத்தில் எந்த பெரிய வேலையும் இல்லை. அமித் ஷாவே அதைப் பார்த்துக் கொள்வார்" என்றார்.