மகளிர் உரிமைத் தொகை: குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும் கிடைக்கும்!
சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும் இந்த உதவி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்தப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் இந்த முகாம்களில் உங்களின் விண்ணப்பங்களை நீங்கள் நிச்சயமாக தரலாம். இப்படி நீங்கள் தரும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களுக்குள் முடிவெடுக்கப்படும். ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கும் என்று அறிவித்திருந்தார்.
அதாவது, ஏற்கனவே விண்ணப்பித்து கிடைக்காத, ஆனால் தகுதி உள்ள பெண்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிப்பவா்கள் இம்முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு குடும்பத்தின் தலைவி மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளை இருக்கும் என்றால், அவரும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்களும், தனியாக ரேஷன் அட்டை வைத்திருந்தால், இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.