Tasmac : `அனைத்து வரம்புகளையும் மீறி விட்டீர்கள்’ - அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை
ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, அதன் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தியதுடன், அதன் மூத்த அதிகாரிகள் பலரையும் விசாரித்தது மேலும் செல்போன் லேப்டாப் உள்ளிட்ட முக்கிய பொருள்களையும் பறிமுதல் செய்தது.
அமலாக்கதுறையின் சோதனைக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.

அரசு தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி உச்ச நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
மேலும் எதுவாக இருந்தாலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக மீண்டும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. ஆனால் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி மீண்டும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது!
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக 41 வழக்குகளை தாக்கல் செய்து உள்ளது. ஆனால் 2025 ஆம் ஆண்டு தான் இந்த விவகாரத்தில் தலையை நுழைத்த அமலாக்கத்துறை அதன் தலைமை அலுவலகம் வரை சோதனை நடத்தியது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களின் தரவுகளையும் நகலெடுத்துள்ளது என வாதங்களை முன் வைத்தார்.

அப்போது பேசிய தலைமை நீதிபதி, ``அமலாக்கத்துறை இத்தகைய முறைகேடு விவகாரங்களில் தனிநபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யலாம். ஆனால் ஒரு நிறுவனத்திற்கு எதிராக எப்படி அதைச் செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி இருக்கிறது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், `இதில் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாக’ தெரிவித்தார்.

``இது போன்ற விஷயங்கள் எதையும் தற்போது தெரிவிக்காதீர்கள். இந்த விவகாரத்தில் மிகவும் கடுமையான குற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும் அபன்ஸ் எங்கே நடந்திருக்கிறது? இந்த விஷயத்தில் அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது” என மீண்டும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியதுடன், `இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையின் அனைத்து விதமான விசாரணைகளுக்கும் தடை’ விதித்து உத்தரவிட்டதுடன் அமலாக்கத்துறையினருக்கு பதில் அளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பித்தார். மேலும் உச்ச நீதிமன்ற கோடை விடுமுறை முடிந்ததற்கு பிறகு இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்து வழக்கினை ஒத்தி வைத்தார்.