Travel Contest: சுற்றுலாவை முழுமையாக அனுபவிக்க என்ன செய்யலாம்? கவனிக்க வேண்டிய விஷயங்களின் லிஸ்ட்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சுற்றுலா என்றதும் எங்காவது சென்று சுற்றி விட்டு வருவது என்றில்லாமல், சுற்றுலாவின் எல்லாக் கூறுகளையும் அறிந்து கொண்டு முழுவதுமாக ரசிக்கக் கற்றுக்கொண்டால் பயணங்களின் இலக்கைச் சரியாக எட்டிவிட்டதாகப் பொருள் கொள்ளலாம்.
அதற்காக எல்லா படிநிலைகளையும் மனப்பாடம் செய்து கட்டாயப்படுத்திப் பின்பற்ற வேண்டியதில்லை. தெரிந்து கொண்டால் சிறப்பாகப் பயணிக்கலாம் என்பதே என் ஆசை.
சுற்றுலா ஒரு முழுமையான மன நிறைவிற்கான நிகழ்வு. சுய கற்றல், சகிப்புத்தன்மை, வேறுபாட்டை மதித்தல், தனிநபர் மற்றும் குழுவினரின் மனத்திருப்தி, ஒருங்கிணைத்தல், பின்பற்றுதல்,

திட்டங்களைச் செயல்படுத்துதல், கலாசாரங்களைப் பேணுதல், மன அழுத்தங்களிலிருந்து விடுபடுதல், Social Inclusion எனப்படும் சமூக உள்ளிணைவைக் கற்றல், சமூக நல்லிணக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல், திறமைகளை ஆராதித்தல் எனப் பல வகையான சிறப்புத் திறன்களை உள்ளடக்கியது.
தனி மனிதனின் மனநிறைவில்தான் சுற்றுலா அடங்கியுள்ளது. இன்பமாகப் பொழுது போக்க வேண்டும் என்பது மனிதனின் விருப்பமாகும். இந்த உணர்வானது உலகம் தழுவிய ஒன்றாக உள்ளது.
TOUR என்ற ஆங்கில சொல்லானது TORNOS என்ற இலத்தீன் சொல்லிருந்து பிறந்தது. டோர்னஸ் என்ற லத்தீன் வார்த்தை சுற்றிவருவதைக் குறிக்கிறது.
இவ்வாறு லத்தீன் மொழியிலிருந்து பிறந்தTOUR என்ற சொல்லானது கி.பி.1292-ல் ஆங்கில மொழியில் இணைந்தது. எனவே பல இடங்களுக்குச் சென்று பார்த்து விட்டு மீண்டும் தனது இருப்பிடம் வந்து சேர்வதைத்தான் இந்த TOUR என்ற வார்த்தை குறிக்கிறது.

சுற்றுலாவின்போது எவற்றைக் கவனத்தில் கொண்டால் சிறப்பாக இருக்கும்?
*செல்லும் இடங்களின் பாரம்பர்யம், நடைமுறை, உள்ளூர்ப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு மதித்து நடக்க வேண்டும்.
*பண்பாட்டுக் கூறுகளைத் தெரிந்துகொள்ளலாம். அவற்றைப் போற்றுவதும் சுற்றுலாவின் முக்கிய நோக்கமாகும்.
*புகைப்படங்கள் அந்தந்த இடங்களில் அனுமதிக்கப்படுகிறதா என்பதை அறிந்தே எடுக்க வேண்டும். முறையான அனுமதி பெறுவதே நன்று.
*வேற்று மாநிலங்களுக்குச் செல்லும்போது ஓரளவு அந்த மொழிக்குப் பரிச்சயம் செய்துகொள்ளலாம். சொந்த மாநிலத்திலேயே சில வார்த்தைகளின் பொருள் இடத்துக்கு இடம் மாறும்.
*சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு கொள்ளுங்கள். குப்பைகளைச் சரியான முறையில் அப்புறப்படுத்துங்கள்.
தண்ணீரைச் சரியாகப் பயன்படுத்துங்கள். அதிகச் சத்தங்களை உருவாக்குவதைத் தவிர்க்கலாம். எந்த வகையிலும் மாசுபாடு ஏற்படுத்த வேண்டாம்.
*காடு, மலை சார்ந்த பகுதிகள் எனில், பறவைகள் மற்றும் பிற உயிரினங்களின் வாழ்வியலில் குறுக்கிடக் கூடாது. அவற்றைத் துன்புறுத்துதல், உணவளித்தல், அத்துமீறி அருகில் செல்லுதல், செல்ஃபி எடுத்தல் போன்றவற்றைத் தவிர்க்கவும். தீப்பிடிக்கும் வண்ணம் பொருட்களை உபயோகப்படுத்தக்கூடாது.

*இயற்கை வளங்கள் அனைவருக்குமானவை. அவற்றைப் பாதுகாக்கும் எண்ணம் கட்டாயம் வேண்டும்.
* சக மனிதர்களை மதிக்க வேண்டும். போகும் இடத்தில் தேவையற்ற பிரச்னைகள் சுற்றுலாவின் நோக்கத்தைக் கெடுத்துவிடும்.
*தேவையான அத்தனை பொருட்களையும் பட்டியலிட்டு எடுத்துச் செல்லுங்கள்.
*முதலுதவிப் பொருட்கள் கையில் இருக்கட்டும்.
*பாதுகாப்பற்ற இடங்களுக்குத் தனியாகச் செல்லக்கூடாது.
*கார் அல்லது வேனில் செல்கிறீர்கள் எனில் ஓட்டுநர் நம்பகமானவரா என்பதைத் தெரிந்து கொண்டு தேவையான பாதுகாப்புகளைச் செய்துகொள்ளுங்கள். அனைவரிடமும் தொடர்பு எண்கள் இருக்கட்டும்.
*கடற்கரைகளில் அதிக கவனத்துடன் இருங்கள்.
*தரமான தங்குமிடங்களை மட்டுமே தேர்ந்தெடுங்கள்.
*பயணங்களை அனுபவித்து மகிழுங்கள். செல்ஃபோனைத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்.
*அந்தந்த இடங்களைப் பற்றிய விஷயங்களை நன்கறிந்து கொண்டு செல்லுங்கள். பிறருக்கும் எடுத்துச் சொல்லி மகிழுங்கள்.
*செல்லும் இடங்களின் சிறப்பு உணவு வகைகளைச் சுவைத்து மகிழுங்கள்.
*வழியிலுள்ள இடங்களையெல்லாம் பார்த்து ரசிக்கும்படி நேரத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
*உடல்நலனுக்கு எதிரான எந்தப் பொருட்களையும் தவிர்க்கவும். அவற்றை உபயோகிப்பது என்ஜாய்மெண்டில்-மகிழ்ந்திருப்பதில் வராது. உபத்திரவங்களைத் தவிர்க்கவும்.
*சுற்றுலா சென்றுவந்த பிறகு ஓய்வு நேரத்தில் அந்தப் புகைப்படங்களைத் தனித் தொகுப்பாக்கி, அழகான கமெண்ட்டுகளுடன் தேதிகளுடன் சேமித்து வையுங்கள்.
*முடிந்தால் ஒரு கட்டுரை கூட எழுதிச் சேமிக்கலாம்.
சுற்றுலா பற்றி பள்ளிப் பருவத்தில் கட்டுரை எழுதும்போது இன்பச் சுற்றுலா என்று தலைப்புத் தருவார்கள். எப்போதும் சுற்றுலா இன்பமயமாக அமைய நல்வாழ்த்துகள்
- கி.சரஸ்வதி.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.