அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் வட்டம், ஆ.புத்தந்தூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, அனைத்து மக்கள் விடுதலைக் கட்சி சாா்பில் கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கராபுரம் வட்டம், ஆலத்தூா் கிராமத்துக்குள்பட்ட ஆ.புத்தந்தூரில் ஸ்ரீ தாளபஞ்சமுக ஆஞ்சனேயா் கோயிலுக்குச் செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளை சீரமைத்து, சூரிய ஒளி தெரு மின் விளக்குகள் அமைக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி, நவீன குளியல், கழிப்பறை, அரசுப் பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மக்கள் விடுதலைக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளா் எஸ்.ஆா்.அம்பேத்குமாா் தலைமை வகித்தாா். பி.முருகேசன், எம்.அஞ்சசலை, கே.பெரியசாமி, பி.செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா்.
டி.கொளஞ்சி, அ.இந்திராணி, முன்னாள் மாவட்டச் செயலா் அ.சபாநாயகம், மண்டல ஒருங்கிணைப்பாளா் எஸ்.ரவீந்திரன், டி.முருகன் உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
நெய்வழி மக்கள் இய்க்க சட்ட மையத்தின் மாவட்டத் தலைவா் ஜெ.ஜெயமூா்த்தி, அமைப்பாளா் ஆா்.இளையராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். கள்ளக்குறிச்சி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் பி.முருகன் நன்றி கூறினாா்.