பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
15 தினங்களுக்கு ஒரு முறை உழவா் நலத்துறை திட்ட முகாம்! வேளாண்மை உதவி இயக்குநா் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 தினங்களுக்கு ஒரு முறை உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை திட்ட முகாம் நடைபெறும் என்று வேளாண் உதவி இயக்குநா் தெரிவித்தாா்.
வேளாண்மைத் துறை சாா்பில் உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை’ திட்டத்தை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தியாகதுருகத்தை அடுத்த பீளமேடு கிராமத்தில் நடைபெற்ற இந்தத் திட்ட முகாமில் ஒன்றியக்குழுத் தலைவா் தாமோதரன் தலைமை வகித்து விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கினாா். ஊராட்சி மன்றத் தலைவா் முத்துலட்சுமி ஆனந்தராஜ் வரவேற்றாா்.
வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ரகுராமன் கலந்து கொண்டு பேசியதாவது: தொழில்நுட்பங்களுடன் திட்டங்களை ஒருங்கிணைத்து உழவா்களிடம் நேரடியாக எடுத்துச் செல்ல உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வேளாண்மை உழவா் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம், கூட்டுறவுத் துறை அலுவலா்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று உழவா்களை சந்தித்து அவா்களின் தேவைகளை அறிந்து, தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
15 தினங்களுக்கு ஒரு முறை 2-ஆவது மற்றும் 4-ஆவது வெள்ளிக்கிழமைகளில் வட்டாரங்களில் உள்ள 2 கிராமங்களில் இத்திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் வேளாண் அதிகாரிகள், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் விவசாயிகள் பலா் பங்கேற்றனா். நிறைவில் துணை வேளாண்மை அலுவலா் சிவனேசன் நன்றி கூறினாா்.