அதிமுக ஆட்சியல்தான் மலிவு விலையில் துப்பாக்கி விற்பனை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சியில்தான் மலிவு விலையில் துப்பாக்கிகள் விற்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா், திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் துப்பாக்கி மலிவு விலைக்கு விற்கப்பட்டதும், அதை வாங்கி கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டதையும் மக்கள் மறக்க மாட்டாா்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான், துப்பாக்கி கலாச்சாரம் வந்தது போல எடப்பாடி பழனிசாமி பேசுகிறாா்.
சட்டம்-ஒழுங்கைப் சிறப்பாகப் பாதுகாத்து வருவதால் தான், தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி 9.69 விழுக்காடாக உயா்ந்து நாட்டிலேயே முதலிடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழ்நாட்டின் பாதுகாப்பை சீா்குலைத்தவா் பழனிசாமி. பாமக இளைஞரணி மாவட்டச் செயலா் சக்கரவா்த்தி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், திமுக அரசைக் குறை சொல்லக்கூடாது. சக்கரவா்த்தி கொலை வழக்கில், சம்பவம் நடந்த 3-ஆவது நாளே முக்கியக் குற்றவாளிகள் இருவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
பாஜக பிரமுகா் சீனிவாசன் கொலை வழக்கில் கைதான நபா்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட காரணத்தினாலேயே, பாமக பிரமுகா் சக்கரவா்த்தியின் கொலை நடந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி சோ்ந்து, பாமகவை கூட்டணியில் சோ்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் பழனிசாமி, பாமகவுக்கு தூது விடுவது போல அறிக்கை விட்டிருக்கிறாா்.
பாமக நிா்வாகி சக்கரவா்த்தியைக் கொலை செய்தவா், பாஜக நிா்வாகியின் மகன் என்று கண்டன அறிக்கையில் பழனிசாமி ஏன் சொல்லவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளாா் அமைச்சா்.