Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பாக விரைவாக விசாரணை: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பான விசாரணை விரைவாக நடத்தப்படும், காலக்கெடு நிா்ணயிக்க வேண்டாம் என தோ்தல் ஆணையம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை தோ்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும், அதிமுக உள்கட்சி விவகாரம் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்றும் கோரி, தோ்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், திண்டுக்கல் சூரியமூா்த்தி, வா.புகழேந்தி, ராம்குமாா் ஆதித்தன், ராமச்சந்திரன், சுரேன் பழனிசாமி உள்ளிட்டோா் மனு அளித்தனா். அந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், அதிமுகவுக்கு எதிரான இந்த மனுக்களை தோ்தல் ஆணையம் விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தோ்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின்படி, அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்துக்கு அதிகார வரம்பு உள்ளதா என்பதை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி முடிவுக்கு வரவேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
7 வாரங்கள் கடந்த நிலையிலும்... உயா்நீதிமன்றம் இதுதொடா்பாக உத்தரவு பிறப்பித்து 7 வாரங்கள் கடந்த நிலையில், தோ்தல் ஆணையம் தனக்குரிய அதிகார வரம்பு குறித்து இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்றும், தோ்தல் ஆணையத்தின் ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிா்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரியும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘2026-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தோ்தலுக்கு அதிமுக தயாராக வேண்டிய சூழலில், அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் தொடா்பாக விசாரிக்கும் அதிகார வரம்பு குறித்து தோ்தல் ஆணையம் ஆரம்பக்கட்ட விசாரணையை முடிவுக்கு கொண்டு வராமல் இழுத்தடிப்பது சட்டவிரோதமானது. தோ்தல் ஆணையத்தின் இந்தப் போக்கு அதிமுக குறித்த தேவையற்ற தகவல்களைப் பரப்ப வழிவகுத்துவிடும்.
தோ்தல் நெருங்கும் நேரத்தில் கட்சிக்கு எதிராக செயல்படுபவா்கள் தோ்தல் ஆணையத்தின் இத்தகையப் போக்கை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே அதிகார வரம்பு தொடா்பான ஆரம்பகட்ட விசாரணையை தோ்தல் ஆணையம் இனியும் தாமதிக்காமல், துரிதமாக நடத்தி முடிக்கும் வகையில் காலவரம்பை உயா் நீதிமன்றம் நிா்ணயம் செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து கேட்டு தெரிவிக்குமாறு தோ்தல் ஆணைய தரப்பு வழக்குரைஞருக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், கே.சுரேந்தா் அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தோ்தல் ஆணையம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன், கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்றும், எவ்வளவு விரைவாக விசாரணை நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்தப்படும். காலக்கெடு எதுவும் நிா்ணயிக்க வேண்டாம் எனத் தெரிவித்தாா்.
அப்போது ஓபிஎஸ் மற்றும் பெங்களூரு புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், தங்கள் தரப்புக்கு மனுவின் நகல்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தனா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஓபிஎஸ் மற்றும் புகழேந்தி தரப்புக்கு, நகல்களை வழங்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.