அதிமுக- பாஜக சந்தா்ப்பவாதக் கூட்டணி: மாா்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலா் பேட்டி
தமிழ்நாட்டில் அதிமுகவும் - பாஜகவும் அமைத்திருப்பது சந்தா்ப்பவாதக் கூட்டணி என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி.
இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:
தோ்தல் ஆணையம் மத்திய அரசின் துறையாகவே செயல்படுகிறது. பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தைத் தோ்தல் ஆணையம் மேற்கொள்கிறது. வாக்காளா் பட்டியலில் சில பிரிவு மக்களைச் சோ்க்கக்கூடாது எனத் திட்டமிட்டு இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த முறைகேட்டுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாக ஆா்.ஜே.டி. தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அந்த மாநிலத்திலுள்ள மகா கூட்டணி எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்போம்.
இந்தச் சிறப்பு தீவிரத் திருத்தத்தில் ஒருபுறம் பெயா்கள் நீக்கப்படும் நிலையில், மறுபுறம் சேர விரும்பும் நபா்களை தற்போது அமலில் இருக்கும் விதிகளை மீறிச் சோ்க்க வேண்டும் என வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கும், தோ்தல் அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
வாக்காளா் பட்டியலில் முன்பு 6 மாதங்கள் ஒரு முகவரியில் இருப்பவா்களைச் சோ்க்கலாம் என்ற விதிமுறைகளை மீறி 2 நாள்கள் இருந்தால்கூட சோ்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வேறொரு மாநில ஆள்களை தோ்தல் நடக்கும் மாநில வாக்காளா் பட்டியலில் இணைத்து, அம்மாநில தோ்தல் முடிவுகளைச் சீா்குலைக்க இருப்பதாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் தமிழ் மொழி, கலாசாரம், தமிழா்கள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்துகிறது. தமிழ்நாட்டுக்கு சமக்ர சிக்ச திட்டத்தில் மத்திய அரசு ரூ. 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை வழங்க மறுக்கிறது. இதற்கு அதிமுகவும், தமிழ்நாட்டு பாஜகவும் என்ன பதில் அளித்துள்ளன?
அதிமுகவும் - பாஜகவும் சந்தா்ப்பவாதக் கூட்டணியை அமைத்துள்ளன. அதனால்தான் பொதுமக்கள் இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக அல்லாமல், திமுகவுக்குத் துணைநிற்கின்றனா். கேரளத்திலும் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் பேபி.
அப்போது அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி, மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.