அமெரிக்க கைதிகளை சிறையில் அடைக்க முன்வரும் எல் சால்வடார்!
அமெரிக்க கைதிகளை குறைந்த கட்டணத்திற்கு தங்களது நாட்டு சிறைச்சாலைகளில் அடைத்துக்கொள்ளும் திட்டத்தை எல் சல்வடார் அரசு முன்வந்துள்ளது.
அமெரிக்க அரசின் செயலாளர் மார்க்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக லத்தீன் அமெரிக்காவிலுள்ள எல் சால்வடார் நாட்டிற்கு சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர் நயீப் புகேலேவுடன் அவர் நேற்று (பிப்.3) சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு மத்தியிலான உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அந்த சந்திப்பின்போது அமெரிக்காவின் முக்கியமான மற்றும் பயங்கரமான குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை தங்களது நாட்டு சிறைச்சாலைகளில் மிகவும் குறைந்த கட்டணத்தில் அடைத்துக்கொள்ளும் திட்டத்தை அதிபர் புகேலே தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்கர்கள், குடியேறிகள், லத்தீன் அமெரிக்க குழுக்களான எம்.எஸ்.13 மற்றும் டிரென் டே அரகுவா ஆகிய குழுக்களைச் சேர்ந்த நபர்கள் என அனைத்து தரப்பு குற்றவாளிகளையும் தங்களது நாட்டு சிறைகளில் அடைத்துக்கொள்வதற்கு எல் சால்வடார் முன்வந்துள்ளது.
மேலும், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் எல் சால்வடார் நாட்டு குடிமக்களை திரும்பப் பெறுவதுடன் நாடு கடத்தப்படும் பிற நாட்டினரையும் ஏற்றுக்கொள்ள எல் சால்வடார் அரசு ஒத்துழைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் பதுங்கு குழிகள் வெடி வைத்து தகர்ப்பு!
கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்று கொண்ட டொனால்டு டிரம்பு அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய சுமார் 30,000 பேரை கியூபா நாட்டிலுள்ள அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான குவாந்தனமோ பே சிறைச்சலையில் அடைக்க திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், எல் சாலவடார் இத்தகைய திட்டத்தை முன்வைத்ததற்கும், தங்கள் நாட்டு குடியேறிகளை திரும்ப பெற ஒத்துழைப்பதற்கும் எல் சால்வடாருக்கு நன்றி தெரிவிப்பதாக அமெரிக்க செயலாளர் மார்க்கோ ரூபியோ கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் புகேலே தங்களது பிரம்மாண்ட சிறைச்சாலையில் குறைந்த கட்டணத்தில் அமெரிக்க குற்றவாளிகளை அடைக்கும் திட்டத்தை அமெரிக்க அரசிடம் வழங்கியுள்ளதாகவும், இந்த தொகை அமெரிக்காவிற்கு மிகவும் சிறிய தொகை என்றாலும் எல் சால்வடாருக்கு மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய சிறைச்சாலை என வர்ணிக்கப்படும் பிரம்மாண்ட சிறைச்சாலையை கடந்த ஓராண்டிற்கு முன்னர் எல் சால்வடாரில் அதிபர் புகேலே திறந்துவைத்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு அந்நாட்டின் 81வது அதிபராக பதவியேற்று கொண்ட புகேலே அங்கு பெருகியிருந்த குற்றவாளிக்குழுக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி சிறையில் அடைத்தார். அவரது ஆட்சி உருவான பின்னர் அந்நாட்டில் குற்றஞ்செயல்கள் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.