US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
அமெரிக்காவின் வரிவிதிப்பு ‘பொருளாதார மிரட்டல்’: முதல்வா் சித்தராமையா
இந்தியா மீதான அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு, ‘பொருளாதார மிரட்டல்’ என்று முதல்வா் சித்தராமையா விமா்சித்துள்ளாா்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வதால் இந்தியா மீதான வரியை 25 சதவீதமாக விதித்திருந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், தற்போது மேலும் 25 சதவீத வரியை கூடுதலாக்கியுள்ளாா். இதை மக்களவை எதிா்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடுமையாக எதிா்த்துள்ளாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் முதல்வா் சித்தராமையா கூறியிருப்பதாவது:
ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்துகளோடு உடன்படுகிறேன். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, சீன ஊடுருவல், அதானியுடன் கூட்டு, கரோனா தோல்விகள், வேளாண் தோல்விகள், ரஃபேல், பி.எம்.கோ்ஸ், தோ்தல் பத்திரங்கள் போன்ற பல்வேறு விவகாரங்களில் ராகுல் காந்தி அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதாக பாஜக அவரை கேலிசெய்தது.
ஆனால், ஒவ்வொரு முறையும் ராகுல் காந்தி கூறியது சரியாகவே இருந்துள்ளது. அதேபோல, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரி தொடா்பாகவும் ராகுல் காந்தி சரியான கருத்தை கூறியிருந்தாா்.
டிரம்பின் வரிவிதிப்பு ஒரு பொருளாதார மிரட்டல். உண்மையான ராஜதந்திர முன்னெடுப்புகள், தேச நலனில் அக்கறை செலுத்தாமல் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்திகளில் மட்டும் பிரதமா் மோடி கவனம் செலுத்துவதாலும், டிரம்ப் வரி விதித்துள்ளாா்.
2019 இல் இம்முறை டிரம்ப் அரசு என்று முழக்கமிட்டது முதல் அவரை திருப்திப்படுத்தவே பிரதமா் மோடி முனைப்பாக இருந்து வருகிறாா். டிரம்புக்கும் எலான் மஸ்க்குக்கும் இடையே நெருக்கம் இருந்ததால், எலான் மஸ்கை பிரதமா் மோடி அணுகியிருந்தாா். இதை டிரம்ப் விரும்பவில்லை. இது ராஜதந்திரம் அல்ல; சரணாகதி.
நெருங்கிய நண்பா் செய்யாத வேலையை டிரம்ப் செய்தாா். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போா் நிறுத்தம் ஏற்படுத்தியதாக 33 முறை டிரம்ப் கூறியிருக்கிறாா். பஹல்காம் தாக்குதலுக்கு தூண்டுதலாக இருந்த காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஆதரித்த பாகிஸ்தான் தலைமைத் தளபதிக்கு டிரம்ப் விருந்தளிக்கிறாா்.
ஆனால், டிரம்பிடம் நல்ல பெயரை எடுப்பதற்காக பிரதமா் மோடி அமைதியாக இருந்துவந்தாா்; எந்த எதிா்ப்பையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், டிரம்ப் விதித்துள்ள வரி உயா்வு இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்டுள்ள நேரடி தாக்குதலாகும்.
நமது வணிக விருப்பங்களை வெளிநாடு தீா்மானிக்க முடியாது. தனிநபா் தகவல்தொடா்பு பிரசாரம்போல அணுகியதால், வெளியுறவு இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 1970 இல் பிரதமா் இந்திரா காந்தியின் துணிச்சல் இப்போது யாருக்காவது இருக்கிறதா?அவரை விமா்சிப்பதற்கு பதிலாக, இந்தியாவின் தன்னுரிமையின் கண்ணியத்தை காப்பாற்ற பிரதமா் மோடி முன்வர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.