அமெரிக்காவிலிருந்து 3-ஆம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!
அமிர்தசரஸ் : அமெரிக்காவிலிருந்து மூன்றாம் கட்டமாக 100-க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் ஒன்று, இன்று(பிப். 16) இரவு இந்தியா வந்திறங்கியுள்ளது.
முன்னதாக, முதல்கட்டமாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களும் இம்மாதம் 5-ஆம் தேதி அமிர்தசரஸ் வந்திறங்கிய நிலையில், அவர்கள் கைகளில் விலங்கு பூட்டியும் கால்களைச் சங்கிலியால் கட்டியும் அவர்களை விமானத்தில் தாயகம் அனுப்பி வைத்த கொடுமை அரங்கேறியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து சி-17 விமானத்தில் சனிக்கிழமை(பிப். 15) நள்ளிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தடைந்த 117 இந்தியர்களும் இதே பாணியில் சிறைக் கைதிகளைப் போன்று நடத்தப்பட்டுள்ள விதம் கவலையளிக்கச் செய்கிறது.
இவ்விவகாரம் நாடெங்கிலும் பேசுபொருளானது. அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் பலரும், அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து, இது குறித்து மத்திய அரசு தரப்பிலிருந்து டிரம்ப் நிர்வாகத்திடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மூன்றாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு இன்று இரவு 10 மணியளவில் வந்துள்ள விமானத்திலும் இதே பாணியில் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியகவில்லை.