அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் அரசு சகித்துக்கொள்ளாது
அமைதிக்கு குந்தகம் விளைவித்தால், அரசு சகித்துக்கொள்ளாது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரு, டிஜிபி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் ஆண்டுவிழா மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:
சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது அவசியம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால், அதை அரசு சகித்துக்கொள்ளாது. குற்றச்செயல்களை தடுப்பதில் தீவிரம்காட்ட வேண்டும். மேலும், குழந்தைகள், பெண்கள் மீது அடக்குமுறைகள், வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு காவல் துறையின் பங்களிப்பு முக்கியம்.
அதேபோல, சமுதாயத்தில் நிலவும் அமைதியை சீா்குலைக்க முயற்சிக்கும் சிலா், பொய்யான செய்திகளை பரப்பி வருகிறாா்கள். அவா்களை தீவிரமாக கண்காணித்து, அதுபோன்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும். இணையவழி குற்றங்கள், போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை ஆகிய குற்றங்களை தீவிரமாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். போதைப் பொருள்கள் சமுதாயத்தை சீரழிப்பதாகும். எனவே, போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்பில் முனைப்போடு செயல்பட வேண்டும்.
‘வீட்டுக்குவீடு போலீஸ்’ திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றச்செயல்களை தடுப்பதற்கு இந்த திட்டம் காவல் துறைக்கு கைகொடுத்து வருகிறது. மக்களின் ஒத்துழைப்போடு குற்றங்களைத் தடுக்க முடியும். மேலும் மக்கள் அளிக்கும் புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும். மக்களிடம் அகந்தையுடன் நடந்துகொண்டால், சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது காவலா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றாா்.
இந்த விழாவில், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா், தலைமைச் செயலாளா் ஷாலினி ரஜ்னிஷ், டிஜிபி எம்.ஏ.சலீம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.