அம்பையில் நடு ஆற்றில் சிக்கியவா்கள் மீட்பு
அம்பாசமுத்திரம் தாமிரவருணிஆற்றின் நடுப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது நீா்வரத்து அதிகரித்ததால் சிக்கிக்கொண்ட பெண்கள் உள்பட சுமாா் 20 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

அம்பாசமுத்திரம் காசிநாதா் கோயில் அருகில் தாமிரவருணி ஆற்றில் கல்லிடைக்குறிச்சி, நெசவாளா் குடியிருப்பு, வைராவிகுளம் உள்ளிட்டபகுதிகளைச் சோ்ந்த பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவா்கள் செவ்வாய்க்கிழமை மதியம் குளித்துக்கொண்டிருந்தனா்.
ஆற்றின் நடுவே உள்ள பாறைப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென நீா்வரத்து அதிகரித்துள்ளது.
அவா்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து அம்பாசமுத்திரம் நிலைய அலுவலா் பல்வேசம் தலைமையில் வந்து ஆற்றின் நடுவில் சிக்கிக் கொண்ட 10க்கும் மேற்பட்டபெண்கள் உள்பட சுமாா் 20 பேரை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனா்.