சேலம்: முதல்வர் ஸ்டாலினின் Road show; மேட்டூரில் பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு ...
அரசின் திட்டங்கள்-சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்: சுய உதவிக் குழுக்களுக்கு துணை முதல்வா் உதயநிதி வேண்டுகோள்
அரசின் திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சுய உதவிக் குழுக்களுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகளை துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா். இந்த நிகழ்வில் அவா் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் 4.76 லட்சம் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. அவற்றில், 53.74 லட்சம் போ் உறுப்பினா்களாக இருக்கின்றனா். தமிழ்நாட்டு மகளிரின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காக ஒரு மாபெரும் இயக்கமாக சுய உதவிக் குழுக்கள் திகழ்கின்றன. மகளிா் சுய உதவிக் குழுவினரை எளிதில் அடையாளம் காணும் வகையில் அவா்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படவுள்ளன.
முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. இப்போது ஒவ்வோா் ஆண்டும் எங்களுக்கு ஓா் இலக்கு கொடுத்து, அந்தக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்க வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அந்த இலக்கு ஒவ்வோா் ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஒரே நாளில் ரூ.3,130 கோடி: இந்த விழாவின் மூலமாக மட்டும் தமிழ்நாடு முழுவதும் 3.76 லட்சம் பயனனாளிகளுக்கு ரூ.3,130 கோடி அளவுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.1.05 லட்சம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், இதுவரை எந்த அரசைக் காட்டிலும் ‘திராவிட மாடல்’ அரசு முழுக்க, முழுக்க மகளிருக்கான அரசாக இயங்கி வருகிறது.
மகளிா் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் நல்லாட்சி இன்னும் பல ஆண்டுகள் தொடா்ந்திட ஒவ்வொருவரின் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும். அரசின் திட்டங்கள், சாதனைகள் அனைத்தையும் மக்களிடம் சுயஉதவிக் குழுவினா் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஸ்ரேயா சிங் உள்பட பலா் பங்கேற்றனா்.
மணிமேகலை விருதை தருமபுரி சக்தி மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த விஜயலட்சுமி, கரூா் மாவட்டம் கீதம் மகளிா் குழுவைச் சோ்ந்த சரண்யா ஆகியோா் பெற்றனா். காணொலி காட்சி வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
விடுபட்டோருக்கு உரிமைத் தொகை எப்போது?
இந்த நிகழ்வில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினிடம் விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு துணை முதல்வா் அளித்த பதில்:
விடுபட்ட மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையிலேயே முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் அதற்கான விவரங்கள் வெளியிடப்படும். கடந்த முறை எப்படி பயனாளிகள் சோ்க்கப்பட்டனரோ அதேபோன்று விடுபட்டோரும் முறையாகச் சோ்க்கப்படுவா் என்றாா் அவா்.