இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 9 | Today Rasi palan | Astrology | B...
ஆக்ஷன் இல்லாத கேங்ஸ்டர் கதை!
ஒரு காட்சியை சினிமாவாக்க நிறைய வழிகள் இருக்கும். ஆனால், எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படி செய்தால் எந்த சுவாரசிய புள்ளியையும் தரிசிக்க முடியாது. காட்சிப்படுத்த எது சிறந்த வழி என்பதைப் பார்த்து ஆராய்ந்து எடுக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி.
ஒரு நல்ல திரைக்கதைதான் சினிமாவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதன் பின் இயக்குநருக்கும், ரசிகர்களுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல். அது மட்டும் இருந்தால், உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது. அழுத்தமாகப் பேசத் தொடங்குகிறார் இயக்குநர் பிரசாந்த் ராமன். தனி ஆல்பங்கள், குறும்படங்கள் என்று இயங்கி வந்தவர். இப்போது 'தாவுத்' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வருகிறார்.
தாவுத்.... தலைப்பு தருகிற பொருள் எப்படி....
கதைதான் இங்கே அதி முக்கியம். தலைப்பு என்பது கவர்ந்திழுக்கும் மையம்தான். 'தாவுத்' என்பது பொதுவாக மாஃபியா வட்டத்தில் உச்சரிக்கப்படும் சொல். மாஃபியாவின் உலகத் தலைமையை தாவுத் என சொல்லுவார்கள்.
அதன் தாக்கம்தான் தலைப்பு. மற்றபடி இது முழுக்க முழுக்க காமெடி கதை. எல்லோரையும் சிரிக்க வைக்கும் நோக்கில் திரைக்கதை எழுதினேன். அரசியலை விட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம்.
நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படி சிலரை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது. இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை. ஒருவனை, அவன் வாழ்க்கையை ஆழமாகப் பார்த்தாலே கதை. அவனோடு ஊர் வரைக்கும் தேடிப் போனால் அது களம். அப்படி நான் படித்த பத்திரிகை செய்தி, அதன் பின் தொடர்ந்து சென்று பார்த்தால் இப்படித்தான் கதை. யூஸ்வலான சேஸிங், ஃபைட் அந்த மாதிரி இல்லாத ஒரு கேங்ஸ்டர் படம் இது.
புது டைப் காமெடி கலந்து ஒரு ஃபேமிலி பேக்கேஜாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதுவரை யாரு திரையில் பார்த்திராத ஒரு புது அனுபவத்தை தரக்கூடிய கேங்ஸ்டர் படமாக இது இருக்கும். குறிப்பாக இன்றைய இளைஞர்களை கவரக்கூடிய வகையில் உருவாக்கி இருக்கிறோம். அதையெல்லாம் சினிமாவுக்கான சமரசங்களுடன் புனைந்து வந்திருக்கிறேன்.
ஆய்வு அனுபவம், படமாக்கிய பக்குவம் எப்படி இருக்கும் படம்...?
இப்போது கூட பார்க்கலாம், நமக்கு ஆகாத, பிடிக்காத ஒரு விஷயத்தை எங்கேயும், எந்த நிமிஷமும் நாம் எதிர்கொள்ள வேண்டி வரும். மொத்தமாகவே, சகலத்திலும் ஊழல் என்கிற இடத்தில் வந்து இப்போது நின்று கொண்டு இருக்கிறோம். சகித்துக் கொண்டால் வாழ்வு வசப்படும். பொறுமை இழந்தால், வாயைத் திறந்து, கண்கள் சிவந்து கேள்வி கேட்டால் அங்கேதான் பிரச்னை ஆரம்பம்.
அப்படி ஒரு கட்டம் இந்தக் கதையில் இருக்கிறது. குடும்பம், சமூகம் என சகல மட்டங்களிலும் கேள்வியை முன் வைக்கிற கதை. அதுதான் மொத்த படமும். எனக்கான, நமக்கான உணர்வாக, மனிதனாகக் காட்சிப்படுத்தியதுதான் புதிது. வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை. அதுக்குப்பிறகு கூட சித்தார்த்தன் துறவுக்குப் போனது நடந்திருக்கிறது.
விமர்சனம் அதிகமாக இருக்குமோ...
எல்லா இடங்களிலும் லஞ்சம், பொய், ஊழல் என மிடில் கிளாஸ் மாதவன் ஒருவர் தவறாமல் நம் தெரு முனை டீக்கடையில் கருத்துச் சொல்லுவார். ஆனால், பெரும்பான்மையான நடுத்தர வர்க்கம் நாம் நினைப்பது போல் இல்லை. பிளாக்கில் வாங்கி கேஸ் கனெக்ஷன் வைத்திருப்பது. ஆண்டு வருமானம் 40 ஆயிரம் ரூபாய் என்று சொல்லி பொய் சான்றிதழ், சலுகைகளை அனுபவிக்கிறோம்.
இப்படி சூழ்ச்சியும் மாய மந்திரங்களும் நிரம்பி கிடக்கிற வாழ்க்கை இந்தச் சமூகத்துக்கு மட்டுமே உரித்தானது. இப்படி பல சலுகைகள் தன்னகத்தே இருந்தாலும், இன்னும் பணம் வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் சுக, துக்கங்களை மறந்து விட்டு ஓடுவதுதான் இங்கே காமெடி. ஆனால், பயங்கரக் காமெடியன்களாகச் சமூகத்தால் பார்க்கப்படுகிற எல்லோரும் காமெடியன்கள் அல்ல. அவர்கள் எல்லாம் காரியவாதிகள்.
சமூகம்தான் அவர்களைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறது. சாண் வயிற்றுக்காக திருடுகிறவர்களை விட, மக்களின் சேவகராக தன்னை நிலை நிறுத்தி திருடுகிறவர்கள் இங்கே நிறைய. அப்படிப்பட்ட திருடுகிறவர்களின் உலகத்தை எட்டிப் பார்ப்பதுதான் இந்தப் படம்.
இன்னும் பெரிய நடிகர்கள் பற்றி யோசிக்கவில்லையா...
நிறைய திட்டங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பட்ஜெட்டுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம். அதே நேரத்தில் கதையின் தன்மையைப் புரிந்தவர்கள் துணைக்கு வந்தார்கள். 'பரோல்', 'உடன்பால்', 'பெண்குயின்', 'சேதுபதி' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கா காதநாயகனாக நடித்துள்ளார். நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்தி வர வேண்டும் என்று அவருக்கு ஆசை உள்ளது.
அதை நிவர்த்தி செய்யும் நோக்கில் இது அவருக்கு அமைந்துள்ளது. சாரா ஆச்சர் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். 'வத்திகுச்சி', 'காலா' போன்ற படங்களில் முக்கி கதாபாத்திரத்தில் நடித்த திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் என நம்பிக்கையான நடிகர்கள் துணைக்கு வந்தார்கள். எல்லோரையும் ஒருங்கிணைத்து வேலை வாங்கியிருக்கிறேன். வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் உமா மகேஷ்வரி மேடத்துக்கு நன்றி.