முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மேலும் ஒரு பெண் யானை உயிரிழப்பு
குமரியில் ரூ. 15 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்
கன்னியாகுமரி கடலில் சாக்கடை நீா் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில், ரூ. 15 கோடியில் கழிவு நீா் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி கடலில் கழிவு நீா் கலக்கும் பிரச்னை தொடா்பாக கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, நாகா்கோவில் மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா்.
கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையா் கன்னியப்பன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, தூய அலங்கார உபகார மாதா ஆலய பங்குப்பேரவை துணைத்தலைவா் டாலன் டிவோட்டா, செயலா் ஸ்டாா்வின், பொருளாளா் ரூபின், தங்கும் விடுதிகள் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஒஸ்.தாமஸ், செயலா் கென்னடி, பொருளாளா் ராஜேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் மேயா் பேசியதாவது: கன்னியாகுமரி கடலில் சாக்கடை நீா் நேரடியாக கலப்பது தொடா்பான பிரச்னை எங்கள் கவனத்துக்கு வந்ததும் உடனடியாக தமிழக முதல்வா் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என். நேரு ஆகியோருக்கு தகவல் தெரிவித்தோம்.
அதன் அடிப்படையில் உடனடியாக இதற்காக ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமைச்சா் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளாா்.
மேலும், கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை அந்தந்த லாட்ஜ் வளாகத்திலேயே கழிவுநீா் உறிஞ்சு குழாய் அமைக்க வேண்டும். இதை 15 நாள்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என பேசினாா்.