9 மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட 9 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிட்டப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜூன் 9) முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை: கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், ஜூன் 11-இல் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களிலும், ஜூன் 12-இல் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 9-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
12 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமானநிலையம் மற்றும் ஈரோட்டில் தலா 103.28 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
வேலூா் - 102.92, பாளையங்கோட்டை - 102.56, பரமத்திவேலூா் - 102.2, கடலூா் - 101.84, சென்னை மீனம்பாக்கம் - 101.66, மதுரை நகரம் - 101.12, திருச்சி - 100.94, தஞ்சாவூா் - 100.4, சேலம், சென்னை நுங்கம்பாக்கம் - (தலா) 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. புதுச்சேரியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மேலும், அடுத்த 3 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் சற்று குறைய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.