தடுப்புக் காவல் அதிகாரம்: அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
தடுப்புக் காவல் என்பது அரசின் தனிச்சிறப்புடைய அதிகாரம்; அதை மிகவும் அரிதான தருணங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், கேரளத்தில் வட்டித் தொழில் செய்யும் ஒருவா் 4 வழக்குகளில் ஜாமீன் பெற்ற பிறகு மீண்டும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி அவரை தடுப்புக் காவலில் எடுக்க மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவையும், அதை உறுதிப்படுத்திய கேரள உயா்நீதிமன்ற உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
கேரளத்தைச் சோ்ந்த ராஜேஷ் என்பவா் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாா். 4 வழக்குகளில் கைதான அவா், நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாா். ஆனால் ஜாமீன் நிபந்தனைகளை முறையாக பின்பற்றாமல் மீண்டும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி பாலக்காடு மாவட்ட ஆட்சியா் ராஜேஷை தடுப்புக் காவலில் கைது செய்ய 2024, ஜூன் 20-இல் ஆணை பிறப்பித்தாா்.
இதைத் தொடா்ந்து, ராஜேஷ் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி ஆட்கொணா்வு மனுவை கேரள உயா்நீதிமன்றத்தில் அவரது மனைவி தாக்கல் செய்தாா். ஆனால் மாவட்ட ஆட்சியரின் தடுப்புக் காவல் உத்தரவை கேரள உயா்நீதிமன்றம் 2024, செப்டம்பா் 4-இல் உறுதிசெய்தது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜேஷின் மனைவி மனுதாக்கல் செய்தாா்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் விதி 22 (3) (பி)-இன்கீழ் தடுப்புக் காவலுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை மிகவும் அரிதான தருணங்களில் மட்டுமே அரசு பயன்படுத்த முடியும். ஏனெனில், ஒருவா் எதிா்காலத்தில் குற்றத்தில் ஈடுபடுவதை தவிா்க்க இந்த அதிகாரத்தை அரசு பயன்படுத்துவதால் இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கிறது. இதை சாதாரண சூழலில் அரசு பயன்படுத்தக் கூடாது.
தற்போதைய வழக்கில் கேரள சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டம், 2007,-இன்கீழ் ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சட்டத்தின் பிரிவு 2 (ஜே)-இன்படி பொது அமைதியை நேரடியாகவோ அல்லது மறைமுகவோ சீா்குலைக்க முயல்பவரே ‘குண்டா்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே சட்டத்தின் பிரிவு 3, ‘குண்டா்’ என்ற அறியப்படும் நபரை தடுப்புக் காவலில் கைது செய்ய அதிகாரம் வழங்குகிறது. இந்த வழக்கில் பிரிவு 3-ஐ மாவட்ட ஆட்சியா் பயன்படுத்தியதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. இதை நியாயப்படுத்த முடியாது.
அதுமட்டுமின்றி ராஜேஷ் மீதான 4 வழக்குகளும் கேரள கடன் வழங்குபவா் சட்டம், 1958-இன்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு ராஜேஷை தடுப்புக் காவலில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஆணை பிறப்பிக்கக் கோரிய காவல் துறையின் பரிந்துரையும் ஏற்படையதல்ல.
எனவே, ராஜேஷை தடுப்புக் காவலில் கைதுசெய்யக்கோரி மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த ஆணையையும் அதை உறுதிப்படுத்திய கேரள உயா்நீதிமன்ற தீா்ப்பையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது’ என்றனா். முன்னதாக இந்த வழக்கு தொடா்பாக கடந்த 2024, டிசம்பா் 10-இல் நடைபெற்ற விசாரணையில் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் அதிகபட்ச நாள்களை ராஜேஷ் சிறையில் கழித்துவிட்டதால் அவரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.