வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15% விமான சேவை குறைப்பு! ஏர் இந்தியா
ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரம்
ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரத்தில், தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி எல்லைக்குள்பட்ட கவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் எடப்பாடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில், அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலா் பள்ளியில் உள்ள தண்ணீா் தொட்டியில் உணவு பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்வது போன்ற விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. மேலும், மாணவிகள் கழுவி சுத்தம் செய்யும் பாத்திரம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜெயக்குமாருடையது என புகாா் எழுந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தாரமங்கலம் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ராஜு புதன்கிழமை தலைமை ஆசிரியா் ஜெயக்குமாரை ஆலச்சம்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு பணிமாறுதல் செய்து உத்தரவிட்டாா். மேலும், இப்புகாரின் உண்மைத்தன்மை குறித்து சம்பந்தப்பட்ட கல்வி அலுவலா்கள் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.