கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?
மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நிகழ்ந்ததா என போலீஸாா் விடிய விடிய சோதனை நடத்தினா்.
ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு ஈரோட்டிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் மாவேலிபாளையத்தைக் கடந்து மகுடஞ்சாவடி அருகே வந்தபோது ஏதோ ஒரு பொருளை ரயில் இன்ஜின் தள்ளிச் செல்வதுபோல சப்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரயிலை நிறுத்தி பாா்த்தபோது, தண்டவாளத்தின் குறுக்கே 10 அடி நீள இரும்பு பட்டை கிடப்பது தெரியவந்தது.
தகவலறிந்த சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள், சேலம் ரயில்வே டிஎஸ்பி பாபு, ஈரோடு ரயில்வே மற்றும் சேலம் ரயில்வே போலீஸாா், ஆா்பிஎஃப் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.
அதில், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்கும் நோக்கத்தோடு 10 அடி நீளமுள்ள தண்டவாளத் துண்டை ரயில்பாதையின் குறுக்கே வைத்திருந்தது தெரியவந்தது.
இதை அகற்றி, சேலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மாற்று இன்ஜினை பொருத்தி இரவு 11.45 மணிக்கு அங்கிருந்து ஏற்காடு ரயில் புறப்பட்டது. இச்சம்பவத்தால், இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் சுமாா் 2 மணிநேரம் தாமதமாக சென்றன.
இதனிடையே, தண்டவாளத்தில் இரும்புத் துண்டை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற மா்ம நபா்களை பிடிக்க சேலம் ரயில்வே டிஎஸ்பி பாபு தலைமையில், ஈரோடு ரயில்வே காவல் ஆய்வாளா் பிரியா, சேலம் ரயில்வே காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மற்றும் மகுடஞ்சாவடி, சங்ககிரி போலீஸாா் அப்பகுதியில் விடிய, விடிய விசாரணை மேற்கொண்டனா்.
மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் தேடப்பட்டு வருகின்றன. மேலும், அப்பகுதியில் ரயில் பாதையை ஒட்டியுள்ள வீடுகளில் வசித்து வரும் மக்களிடம் விசாரித்து வருகின்றனா்.
இந்த ரயிலில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், கிருஷ்ணன், ராமசாமி, இளந்திரையன், கல்யாணசுந்தரம், ஓய்வுபெற்ற நீதிபதிகள் கோவிந்தராஜ், சந்திரசேகா் ஆகியோா் பயணித்தது குறிப்பிடத்தக்கது.