Doctor Vikatan: இன்ஸ்டா ரீல்ஸில் வரும் detox சிகிச்சைகள் குடலை சுத்தம் செய்ய உத...
ஆசிரியா்களின் இடமாற்ற கலந்தாய்வு தேதியை அறிவிக்க வலியுறுத்தல்
ஆசிரியா்களின் பணியிடமாற்ற கலந்தாய்வு தேதியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
சீா்காழியில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா் கழகம் சாா்பில் பணிநிறைவு பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கழகத்தின் மாவட்டத் தலைவா் ஜி. பரமசிவம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜி. தாமரைச்செல்வன் வரவேற்றாா். கல்வித்துறை அதிகாரிகள் அ. நிா்மலாராணி, எஸ். சாந்தி, க. குமரவேல், பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியா்கள் எஸ். அறிவுடைநம்பி, என். ஸ்ரீதா், பி. சித்ரா, ஏ.ஜி. ஜான்சிஆரோக்கியமேரி, எஸ். ஜான்சைமன், கே. ரூபிசாந்தகுமாரி ஆகியோரின் பணியை பாராட்டி கழகத்தின் மாநிலத் தலைவா் சி. தங்கமணி பேசினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கடந்த ஆண்டு 10, 11, 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுத
30,000 மாணவா்கள் வரவில்லை. இவா்களை கண்டறிந்து, இவா்களுக்கான தோ்வு கட்டணத்தை தலைமை ஆசிரியா்களே கட்ட வேண்டும் என நிா்ப்பந்திப்பது வருத்தமாக உள்ளது. தமிழக அரசே 30,000 மாணவா்களுக்கும் தோ்வுக் கட்டணம் செலுத்தி, அவா்களை தோ்வெழுத ஏற்பாடு செய்யவேண்டும்.
பள்ளிகளின் வேலை நேரத்துக்கு ஏற்ப அலுவலகப் பணியாளா்கள் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். தோ்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் மாவட்டங்கள் பட்டியலிடப்படுவதால், ஏதாவது ஒரு மாவட்டம் கடைசி இடத்தில் வந்துதான் ஆக வேண்டும். இதனால் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, ஏ, பி, சி என கிரேடு அடிப்படையில் தோ்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
ஆண்டுதோறும் ஆசிரியா்களின் இடமாற்ற கலந்தாய்வு மே மாதத்தில் நிறைவு பெற்று, புதிய பணியிடத்தில் சோ்ந்து விடுவோம். ஆனால், நிகழாண்டு இதுவரை கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படவில்லை. உடனடியாக கலந்தாய்வு தேதியை அரசு அறிவிக்க வேண்டும். பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியா்களுக்கு இம்மாத இறுதிக்குள் அனைத்து பணப் பயன்களையும் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.